பழைய எம்ஆர்டி ரயில் பாகங்களில் இருந்து பெறப்பட்ட புதிய இருக்கைகள், பாதுகாப்பு கைப்பிடிகள், பூச்சட்டிகள் போன்றவை அக்கம்பக்க பேட்டைகளில் பொருத்தப்பட்டு இருப்பதைக் குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம்.
குறைந்தது 1,500 எம்ஆர்டி இருக்கைகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளின் வெற்றுத் தளங்களிலும் இதர சமூக இடங்களிலும் பொருத்த இத்திட்டம் இலக்கு கொண்டு உள்ளது. மேலும், 1,400 ரயில் கைப்பிடிகள், நடமாடுவதில் சிரமத்தை எதிர்நோக்கும் குடியிருப்பாளர்களுக்காக வீவக பேட்டைகளில் பொருத்தப்பட உள்ளன.
ரயில்களில் காணப்படும் ஏறக்குறைய 900 'இண்டர்காம்' சட்டங்கள், 'எல்இடி' விளக்கு மூடிகளை சமூகத்தின் பசுமை இடங்களில் பயன்படுத்த இவை பூச்சட்டிகளாக மாற்றப்படும்.
மக்கள் செயல் கட்சியின் (மசெக) 15 நகர மன்றங்களும் இந்த மறுபயனீட்டு முயற்சியை முன்னெடுத்துள்ளன.
2025க்குள், பழைய ரயில்களில் இருந்து பெறப்பட்ட 14,400 கிலோகிராம் எடையுடைய பிளாஸ்டிக் பொருள்கள், உலோகங்கள், மறுசுழற்சி செய்யப்பட முடியாத பொருள்கள் உள்ளிட்டவை குப்பை நிரப்பும் நிலத்தில் குவிக்கப்படுவதற்குப் பதிலாக குடியிருப்புப் பேட்டைகளில் மறுபயன்பாட்டிற்கு விடப்படும் என்று மசெக நேற்று கூறியது.
இத்திட்டம், நகர மன்றங்கள் ஏறக்குறைய $275,000 பணத்தை மிச்சப்படுத்த உதவும் என்றும் மசெக சொன்னது. உட்லண்ட்ஸ் டிரைவ் 50ல் நேற்று நடைபெற்ற கண்காட்சியுடன் இத்திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
"இத்திட்டத்தின் மூலம் செமாக்காவ் குப்பைக் கிடங்கில் ஏறக்குறைய 14,400 கிலோகிராம் கழிவுகள் குவிக்கப்படுவதைக் குறைக்க நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம். செமாக்காவ் நிலத்தின் செயல்பாட்டுக் காலத்தை நீட்டிக்க நாங்கள் ஆற்றும் பங்கு இது," என்று திட்டத்தின் துணைத் தலைவர் ஹனி சோ குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் ஒரே குப்பை நிரப்பும் நிலமான செமாக்காவ் தீவு, 2035க்குள் முழுமையாக நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் அடையாளத்தின் முக்கிய தூணாக எம்ஆர்டி ரயில்கள் விளங்குவதைச் சுட்டிய திருவாட்டி சோ, ரயில் பாகங்களில் இருந்து பெறப்பட்ட பொருள்களைப் பார்க்கும்போது, குடியிருப்பாளர்கள் தங்களுக்கு மிகவும் பரிச்சயமான ஓர் உணர்வைப் பெறுவர் என்றார்.