ரத்த தானம் வழங்க முன்வருமாறு விடுக்கப்பட்டு இருந்த வேண்டுகோளுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி, கடந்த வாரம் 3,300க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்க முன்வந்தனர்.
பொதுவாக ரத்த தானம் வழங்க முன்வருவோரின் எண்ணிக்கையைவிட இது 43 விழுக்காடு அதிகம் என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.
"ரத்த தானம் வழங்க அடுத்த வாரமும் கூடுதலானோர் முன்வருவர் என நாங்கள் நம்புகிறோம்," என்று சங்கம் கூறியது.
ஊட்ரம் சாலையில் உள்ள சுகாதார அறிவியல் ஆணையத்தின் ரத்த வங்கிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு நேற்று முன்தினம் சென்றிருந்தது. அப்போது அந்த ரத்த வங்கியில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள நான்கு ரத்த வங்கிகளில் இதுவும் ஒன்று.
A+, O+ ரத்த வகை இருப்பு, ஒன்பது நாள்களுக்கும் குறைவாக இருந்ததாகக் கூறிய செஞ்சிலுவை சங்கம், ரத்த தானம் வழங்க கூடுதலானோர் முன்வருமாறு ஜூலை 8ஆம் தேதி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.
பொதுவாக, குறைந்தது 12 முதல் 15 நாள் ரத்த இருப்பு தேவைப்படுவதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். ரத்த தானம் வழங்க முன்வருவோர் எண்ணிக்கையைப் பாதிக்கும் பல்வேறு அம்சங்களில் தற்போதைய கொவிட்-19 அலையும் ஒன்று என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.
"அவ்வப்போது ரத்த தானம் கொடுப்போர், கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் அல்லது கொவிட்-19 தொற்றியவர்களுடன் நெருங்கிய தொடர்பில் வந்தனர்," என்று சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
கொவிட்-19 தொற்றுக்கு ஆளானோர், ரத்த தானம் வழங்குவதற்கு முன்பு குறைந்தது 28 நாள்கள் காத்திருக்க வேண்டும். அவர்கள் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்திருப்பதை உறுதிசெய்ய இந்த வழிகாட்டி நடைமுறை பரிந்துரைக்கப்படுகிறது.

