ஓசிபிசி வங்கியின் வாடிக்கை யாளர்களைக் குறிவைத்து சில காலமாக நடந்துவரும் மோசடிகளில் தொடர்பு வகித்த சந்தேகத்தின் பேரில் 31 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறைநேற்று இதைத் தெரிவித்தது.
கடந்த டிசம்பர் 26ஆம் தேதி ஓசிபிசி வங்கி அதிகாரிகள் போல நடித்து மோசடி செய்தவர்களிடம் ஏமாந்த நபரிடமிருந்து புகார் கிடைத்ததாக அது கூறியது.
பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் தாம் அனுமதி தராத பரிவர்த்தனைகள் இடம்பெற்றிருந்தன. அவற்றால் ஆடவர் $100,000க்கு மேல் இழந்தார். பாதிக்கப்பட்ட வரின் பணத்தில் $18,000க்கு மேல், யுஓபி வங்கியில் இருந்த வர்த்தகக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதாக முதல் கட்ட விசாரணை கூறியது.
கடந்த ஆண்டு நவம்பரில், உள்நாட்டில் தொடங்கப்பட்ட நிறுவனத்துக்காக சந்தேக நபர் அந்த யுஓபி வங்கிக் கணக்கைத் திறந்திருந்தார். அதற்காக அவர் தமது 'கார்ப்பாஸ்' விவரங்களைப் பயன்படுத்தி இருந்தார். பின்னர், பணத்தைப் பெற்றுக்கொண்டு பெயர் தெரியாத மற்றொரு நபரிடம் தந்துவிட்டார்.
அந்த 31 வயது ஆடவரின் வங்கிக் கணக்கிலிருந்து டிசம்பர் 20 முதல் 27 வரை, $4 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டது.
குற்றச்செயலால் இன்னொருவர் பலன் பெற உதவ திட்டமிட்டதற்காக 31 வயது ஆடவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது $500,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

