சிங்கப்பூர் கண் ஆய்வுக் கழகம், 'ரோச்சே' மருந்தாக்க நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் இணைந்து கண் பார்வையைக் காக்க உதவும் புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
'வேபிஸ்மோ' எனப்படும் இந்தப் புதிய மருந்து பத்தாண்டுக் கடின முயற்சியின் பலனாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வயதாவதால் கண் ரத்தக் குழாய்களில் ஏற்படும் கோளாறு, நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய பாதிப்பு ஆகியவற்றுக்குச் சிகிச்சை அளிக்க இந்த மருந்து பயன்படும்.
சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. வயது காரணமாக கண் ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பால் உலகெங்கும் கிட்டத்தட்ட 20 மில்லியன் பேர் அவதியுறுகின்றனர். 60 வயதுக்கு மேலானோரிடம் கண்பார்வை இழப்பிற்கு இது முக்கியக் காரணமாக விளங்குகிறது.
நீரிழிவு நோயால் ஏற்படும் கண்பார்வை பாதிப்பு உலகளவில் ஏறக்குறைய 21 மில்லியன் பேரைப் பாதித்துள்ளது. இதனாலும் பார்வையை இழக்க நேரிடும்.
'ரோச்சே' நிறுவனத்தின் இந்த மருந்தை சிங்கப்பூர் கண் ஆய்வுக் கழக ஆய்வாளர்கள் நோயாளிகளிடம் சோதித்தனர்.
தொடர்ந்து சிங்கப்பூர் கண் ஆய்வுக் கழகத்துடன் இணைந்து பணியாற்றி சிங்கப்பூரில் கண் நோயால் சிரமப்படுவோருக்கு உதவ 'ரோச்சே' நிறுவனம் கடப்பாடு தெரிவித்தது.

