போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளுக்குக் கையூட்டு தர முயன்றவருக்கு நேற்று எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சீன நாட்டவரான 38 வயது ஹான் ஷாவ்லு, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினார்.
தன் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடக் கோரி போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் நூறு வெள்ளி தர முற்பட்டார்.
இதன் தொடர்பில் ஹான் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
விசாரணையில், தாம் லஞ்சம் தரவில்லை என்றும் அபராதத் தொகையைச் செலுத்த முற்பட்டதாகவும் ஹான் கூறினார்.
ஐந்து நாள் விசாரணைக்குப் பிறகு ஹான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
சம்பவ தினத்தன்று விசாரிக்கச் சென்ற போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளிடம் ஹான் மேண்டரின் மொழியில் பேசியதால் அவர்கள் அம்மொழி தெரிந்த சக அதிகாரியின் உதவியை நாடினர்.
ஹான் இரண்டு 50 வெள்ளி நோட்டுகளைக் காட்டி போதாவிட்டால் மேலும் தருவதாகவும் தன்னை விட்டுவிடும்படியும் கூறியதாகத் தெரியவந்தது. அங்கு வந்த மேலதிகாரிக்கும் அவர் $100 தர முற்பட்டார்.

