அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் 21 வயது இளையர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம்.
நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின் 2.10 மணியளவில் சர்க்குலர் ரோடுக்கு அருகே ஆடவர் ஒருவரை மற்றோர் ஆடவர் கத்தியதால் தாக்கியதாகச் சொல்லப்படும் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
முதற்கட்ட விசாரணையில், முறையே 37 வயதும் 21 வயதும் நிரம்பிய ஆடவர்கள் இருவர் சண்டையிட்டது தெரியவந்துள்ளது. இதில் 21 வயது இளையர் மற்றவரைக் கத்தியால் தாக்கிவிட்டு சம்பவ இடத்தை விட்டுத் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் கூறினர்.
தாக்கப்பட்டவருக்கு உடலில் பல காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறின.
குற்றச்செயல் நடந்த 12 மணி நேரத்துக்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
கைது நடவடிக்கையின்போது, குற்றச் செயலில் ஈடுபட்டவருக்கு அடைக்கலம் தந்ததாகக் கூறப்படும் 19 வயது இளையரும் கைது செய்யப்பட்டார்.
இருவரும் இன்று நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்படுவர்.