சட்ட அமைச்சு நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய சட்டத் தொழில்நுட்பத் தளத்தை அதிகாரபூர்வமாக நடப்புக்குக் கொண்டுவந்துள்ளது.
'லுப்ல்' (Lupl) தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து அமைச்சு இதனை உருவாக்கியுள்ளது.
வெவ்வேறு சட்டப் பிரிவுகளில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களிடம் இருந்து திரட்டப்பட்ட கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அது தெரிவித்தது.
சிங்கப்பூரின் சட்ட நிறுவனங்கள் அவற்றின் அன்றாட வேலைகளை நெறிப்படுத்த இந்தப் புதிய தளம் உதவும். இதன் மூலம் வழக்கு விவரங்களை நிர்வகித்தல், ஆவணப் பரிமாற்றம், கட்டண விவரங்களைக் கையாளுதல் போன்றவை எளிதாகக்கூடும்.
சட்ட நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத் தளத்தைப் பயன்படுத்துவதற்கும் இதற்குத் தேவைப்படும் கருவிகளில் முதலீடு செய்யவும் ஆகும் முதற்கட்ட செலவுகளுக்கு அமைச்சு கைகொடுக்கும்.
இந்த நிதியுதவித் திட்டத்துக்கு 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் ஆதரவு அளிக்கின்றன.
வெவ்வேறு வகையான வழக்குகளுக்கான விவரங்கள், அவை தொடர்பான கால வரையறை, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வழக்குகளின் அண்மை நிலை, நடவடிக்கைகளுக்கான காலக்கெடு போன்ற பல விவரங்களை இந்தத் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பரவலாகப் பயன்படுத்தப்படும் 'கூகல் டாக்ஸ்', 'வாட்ஸ்அப்' போன்றவற்றுடனும் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் தங்களிடம் சட்டச் சேவை நாடுவோரிடம் ஒரே தளத்தைப் பயன்படுத்தித் தொடர்புகொள்ள வகைசெய்வது இதன் நோக்கம்.
இதனை வழக்கறிஞர்கள் அனைவரிடமும் கொண்டுசெல்லும் நிகழ்ச்சிகள், பயிற்சிகள் போன்றவற்றுக்கு சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்துடன் இணைந்து செயலாற்றவிருப்பதாக அமைச்சு கூறியது.

