கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு வயதுச் சிறுமி மாண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் 12 வயதுக்குக் குறைவான சிறாரிடையே இத்தகைய இரண்டாவது மரணம் இது.
சிறுமி, நிமோனியா காய்ச்சலால் சென்ற ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்; இதற்கு முன் ஆரோக்கியமாக இருந்த அவருக்கு மருத்துவச் சிக்கல்கள் ஏதும் இருந்ததில்லை என்று ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சு நேற்று தெரிவித்தது.
இம்மாதம் 15ஆம் தேதி சிறுமிக்கு நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றின.
தனியார் மருத்துவரிடம் சென்றபோது 'ஏஆர்டி' பரிசோதனையில் சிறுமிக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானது என்று அமைச்சு குறிப்பிட்டது.
சிறுமியிடம் காணப்பட்ட நோய் அறிகுறிகளைச் சமாளிக்கும் மருந்துகள் தரப்பட்டன. இருப்பினும் அவரது உடல்நிலை மேம்படவில்லை; அன்றிரவு உடல்நிலை மேலும் மோசமடைந்து சிறுமி உயிரிழந்தார் என்று சுகாதார அமைச்சு சொன்னது.
விசாரணைக்குப் பிறகு, கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்ட நிமோனியாவால் சிறுமி மாண்டதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
பொதுவாக முதியவர்கள், பெரியவர்கள் ஆகியோரைவிடச் சிறுவர்கள் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பாற்றலைப் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் சிலர் இவ்வாறு தீவிர பாதிப்படையும் சம்பவங்களும் நேர்வதை அமைச்சு சுட்டியது.
சுகாதார அறிவியல் ஆணையம், கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான வல்லுநர் குழு ஆகியவற்றுடன் இணைந்து, ஐந்து வயதுக்குக் கீழான பிள்ளைகளிடம் தடுப்பூசிகளின் செயல்திறன், பாதிப்பு ஆகியவை குறித்து ஆய்வுசெய்வதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

