ஹேரியர். இது, செயற்கை நுண்ணறிவாற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு தானியக்க இயந்திர மனிதக் கருவி.
நான்கு கால்களுடன் நாயை நினைவுபடுத்தும் வடிவமைப்பு கொண்ட இது, குறுகலான இடங்களிலும் செல்லக்கூடியது; படிகளிலும் ஏற வல்லது.
நகர்ப்புறச் சூழலில் கண்காணிப்புக்குப் பயன்படக்கூடிய இந்த இயந்திர மனிதக் கருவி, உட்புறங்களின் முப்பரிமாண வரைபடைத்தை அவ்வப்போதே உருவாக்கும் திறன் கொண்டது.
'டிஎஸ்ஓ' எனப்படும் தற்காப்பு அறிவியல் அமைப்பின் தேசிய ஆய்வுக்கூடம் அதன் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு புத்தாக்கப் படைப்புகளில் ஹேரியரும் அடங்கும்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், இந்த ஆய்வுக்கூடத்தின் பணி, சிங்கப்பூர் ஆயுதப் படைக்கும் தற்காப்பு அமைச்சிற்கும் இன்றியமையாதது என்று கூறினார்.
முப்படைகளுக்குச் சேவை வழங்கியதைப் போன்றே சிங்கப்பூர் ஆயுதப்படையின் நான்காவது பிரிவான புதிய மின்னிலக்க, உளவுச் சேவைப் பிரிவிலும் தொடர்ந்து இது முக்கியப் பங்காற்றும் என்றார் அமைச்சர் இங்.
'டிஎஸ்ஓ' தேசிய ஆய்வுக்கூட ஊழியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட வருகையாளர்களும் மட்டுமே ஒரு வாரம் நீடிக்கும் இந்தக் கண்காட்சிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். ஏறக்குறைய 1,600 ஆய்வாளர்களும் பொறியாளர்களும் இதில் பணிபுரிகின்றனர்.

