'கான்டினென்டல் டிராவல் சிங்கப்பூர்' எனும் உள்ளூர் சுற்றுப்பயண முகவரின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று அறிவித்தது.
'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டு ('எஸ்ஆர்வி') தொடர்பான மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் ஐந்து மாதங்களுக்கு நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிறுவனம், 'எஸ்ஆர்வி' பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி முன்பதிவு செய்த சிலருக்கு, தொகையில் ஒரு பகுதியைத் திருப்பித் தந்ததாகத் தெரியவந்துள்ளது.
சென்ற ஆண்டு செப்டம்பரில் 'எஸ்ஆர்வி' பற்றுச்சீட்டு மோசடி தொடர்பான சந்தேகத்தின் பேரில் காவல்துறை இந்நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைதுசெய்தது.
அக்டோபர் 2021ல் உரிமம் ரத்து செய்யப்படுவது குறித்த எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டது. நிறுவனம் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.
விசாரணை தொடர்கிறது.
'எஸ்ஆர்வி' பற்றுச்சீட்டுகள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் உள்ளூரில் சுற்றுப்பயண இடங்களுக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டவை.
இவற்றை மற்றவர்களுக்கு விற்கவோ ரொக்கமாக மாற்றவோ அனுமதி இல்லை.

