சட்டவிரோத சூதாட்டம்: 29 பேர் கைது
காவல்துறை அதிகாரிகள் கடந்த ஞாயிறன்று தீவு முழுவதும் நடத்திய சோதனையில் சட்டவிரோத சூதாட்டம் தொடர்பில் 29 பேர் பிடிபட்டனர். அவர்களில் ஐவர் பெண்கள்.
கைது செய்யப்பட்ட அத்தனை பேரும் 32க்கும் 75க்கும் இடைப்பட்ட வயதினர். அவர்களிடம் இருந்து $730,000 மதிப்புள்ள ரொக்கமும் மின்னியல் சாதனங்களும் கைப்பற்றப்பட்டன. கணினிகளும் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்ட மின்னியல் சாதனங்களில் அடங்கும். சட்டவிரோத சூதாட்டம் தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். ரெட்ஹில், புக்கிட் பாத்தோக், ஹவ்காங், ஜூரோங் வெஸ்ட், தேபான் கார்டன் மற்றும் தெம்பனிஸ் ஆகிய பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்டவர்களில் இரு ஆடவர்கள் மீது இணைய சூதாட்டத் தடுப்புச் சட்டம் 2014ன் கீழ் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இணைய சூதாட்டத்தை நடத்தும் குற்றத்துக்கு $200,000 வரையிலான அபராதம் ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனை ஆகியன விதிக்கப்படலாம்.
ஓசிபிசி வங்கி மோசடிக்காரர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள்
ஓசிபிசி இணைய வங்கியில் நிகழ்ந்த மோசடி தொடர்பில் நேற்று மார்க் டியோ சின் யான், 31, என்னும் ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன், இணைய வங்கி மோசடிக்கும் தொடர்பில்லாத இதர பல குற்றச்சாட்டுகளும் இவர் மீது சுமத்தப்பட்டன. இரு பெண்களிடம் $50ம் $250ம் ஏமாற்றியது, இயோ சூ காங் ரோட்டில் ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டியது போன்றவை அந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
முன்னதாக, காவல்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஓசிபிசி வங்கி இணைய வங்கி மோசடிக்கு ஆளான ஒருவரிடமிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி புகார் ஒன்று கிடைக்கப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
"தமது வங்கிக் கணக்கில் சட்டவிரோதப் பணப் பரிவர்த் தனைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதன் காரணமாக தமக்கு $100,000க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் தமது புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அவரின் கணக்கிலிருந்து யுஓபி நிறுவனக் கணக்கு ஒன்றிற்கு $18,000 பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது," என காவல்துறை கூறியது.
ராயல்ஸ் பியூட்டி என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமான யுஓபி வங்கிக் கணக்கை முன்பின் தெரியாத ஒருவர் பணம் அனுப்பவும் பணம் பெறவும் அனுமதித்ததாக டியோ மீது குற்றம் சுமத்தப்பட்டது. $12.80 மில்லியன் ஓசிபிசி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தை முதன்முதலில் ஒப்புக்கொண்ட லியோங் ஜுன் ஸியான், 21, என்பவர் ஓராண்டு காலத்துக்கு சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என அண்மையில் உத்தரவிடப்பட்டது. இவர் தம் மீதான குற்றத்தை ஏப்ரல் 20ஆம் தேதி ஒப்புக்கொண்டார். லியோங்கின் மோசடியோடு டியோ சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்புடையதா என காவல்துறை அறிக்கை குறிப்பிடவில்லை.

