சிங்கப்பூர் காவல்துறையின் கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்த சார்ஜண்ட் ஒருவர் தமது சொந்த சமூகத்தினரிடம் $5.4 மில்லியன் கையாடல் செய்து, ஒரு பகுதி பணத்தை இணைய சூதாட்டத்திற்குப் பயன்படுத்தினார். தற்போது 36 வயதாகும் பிகாஷ் குருங் என்னும் அந்த ஆடவருக்கு நேற்று பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் பணத்தை உயர்வான நாணய மதிப்பில் நேப்பாளத்திற்கு அனுப்பித் தருவதாகக் கூறி 196 பேரிடம் இவர் பணம் வாங்கினார். இருப்பினும், வாங்கிய பணத்தில் $211,000ஐ மட்டும் அவர் நேப்பாளத்திற்கு அனுப்பினார். ஏராளமான பணத்தை அவரே வைத்துக்கொண்டார். ஒவ்வொருவரிடம் இருந்தும் $2,000 முதல் $240,000 பணத்தை அவர் கையாடினார். 2018 செப்டம்பர் 24ஆம் தேதி வேலையிலிருந்து பிகாஷ் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.
நம்பிக்கை மோசடி செய்த 25 குற்றங்களையும் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கை தொடர்பான ஒன்பது குற்றங்களையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதர 188 குற்றச்சாட்டுகள், தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன. கையாடல் குற்றங்கள் 2016ஆம் ஆண்டு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. காற்பந்து சூதாட்டத்தில் பெரு நஷ்டம் ஏற்பட்டது. மேலும் சூதாட்டத்திற்குப் பணம் தேவைப்பட்டகாரணத்தால், சமூகத்தினர் தம் மீது வைத்திருந்த மதிப்பைப் பணமாக்க முயன்றார்.
தமது வாடிக்கையாளர்களிடம் சிங்கப்பூர் வெள்ளியைப் பெற்று அதிலிருந்து பொருள்களை வாங்கி நேப்பாளத்திற்கு அனுப்புவதாகவும் அங்கு அந்தப் பொருள்களை நல்ல விலைக்கு விற்று லாபத்துடன் மொத்தப் பணமும் வாடிக்கையாளர்களின் குடும்பத்திடம் தரப்படும் என்றும் பிகாஷ் உறுதி அளித்திருந்தார். அதனை நம்பி, ஓய்வு பெற்ற அதிகரி ஒருவர் 2017 டிசம்பருக்கும் 2018 ஏப்ரலுக்கும் இடையில் $240,000 பணத்தை பிகாஷிடம் கொடுத்தார். ஆனால், அந்தப் பணம் அவரது குடும்பத்திற்குச் சென்று சேரவில்லை. இவ்வாறு பலரும் பிகாஷிடம் பணம் கொடுத்து ஏமாந்ததால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

