துவாஸ் இரண்டாவது பாலத்தில் மற்றொரு வாகனமோட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக ஜோகூரில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். விடுவிக்கப்பட்டதும் அவ்விருவரும் சிங்கப்பூர் திரும்பிவிட்டதாக இஸ்கந்தர் புத்திரி மாவட்ட காவல் துறை அதிகாரி ரஹ்மத் அரிஃபின் நேற்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் கூறினார்.
இருப்பினும் அவர்கள் எப்போது விடுவிக்கப்பட்டனர் என்ற விவரத்தை அவர் வெளியிட மறுத்தார். மேலும், அவ்விருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படவில்லை என்றார் அந்த அதிகாரி.
சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் அரசாங்க வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தாக உதவி ஆணையரான திரு ரஹ்மத் தெரிவித்தார். எந்த குற்றத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது என்று காவல்துறை தெரிவிக்கவில்லை. குறும்புத்தனத்தில் ஈடுபட்டதற்காக அவ்விருவரையும் காவல்துறை தேடியதாக முன்னர் வந்த செய்திகள் தெரிவித்தன.
பிணையில் இருக்கும் காலத்தில் இருவரும் காவல்துறையுடன் தொடர்பில் இருக்கவேண்டும், எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஜூலை 14ஆம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டனர். 10ஆம் தேதி சம்பவம் நடைபெற்றது. தங்களது காரில் இருந்து இறங்கிய இருவரும் சாலையில் நின்றவாறு மற்றொரு காருக்குள் இருந்தவரை நோக்கி ஏதேதோ பேசி தகராற்றில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

