மாணவர்களைப் போல பாசாங்கு செய்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பாளர்களிடம் நன்கொடை திரட்ட முயன்ற இரண்டு கடற்படை வீரர்கள், சம்பவம் நிகழ்ந்தபோது குடிபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் 25ஆம் தேதி அதிகாலை மாணவத் தொண்டூழியர்கள் எனக் கூறிக்கொண்டு அந்த இருவரும் நன்கொடை கேட்பதை குடியிருப்பாளர் ஒருவர் காணொளி எடுத்தார்.
அந்தக் குடியிருப்பாளர் நன்கொடை வழங்கவில்லை.
பொய் சொல்லி நன்கொடை கேட்ட இருவரும் முழுநேர கடற்படை வீரர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
தங்கள் தவற்றுக்கு இருவரும் வருத்தம் தெரிவித்திருப்பதாக தற்காப்பு அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டது.
"சிங்கப்பூர் கடற்படை வீரர்கள் உயர்தர ஒழுக்கம், நாணயம் ஆகியவற்றைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டும்.
"சம்பந்தப்பட்ட இருவருக்கு எதிராக இம்மாதம் 20ஆம் தேதியன்று வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அதில் அபராதமும் அடங்கும்," என்று தற்காப்பு அமைச்சு கூறியது.
குடிபோதையில் மாணவர்களைப் போல பாசாங்கு செய்து நன்கொடை கேட்டவர்களைக் காணொளி எடுத்த குடியிருப்பாளர்.
படம்: சாவ் பாவ்

