வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டு விலை தொடர்ந்து ஒன்பதாவது காலாண்டாக உயர்ந்துள்ளது.
அதே வேளையில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைந் துள்ளது.
இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 2.8 விழுக்காடு உயர்ந்தது. இது முதல் காலாண்டில் இருந்த 2.4 விழுக்காட்டு உயர்வைவிட அதிகம்.
வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் உச்ச அளவில் இருப்பதால் இந்த உயர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று பிராப்பர்டி குரு சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாகி டான் டீ கூன் கூறினார்.
தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளின் கட்டுமானத்தில் நிலவும் தாமதம், பெரிய வீடுகளை வாங்க விருப்பம் போன்ற காரணங்களால் மறுவிற்பனை வீடுகள் ஏற்றம் காணலாம் என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் சிஓவி எனப்படும் கூடுதல் ரொக்கத் தொகை அளிக்காமல் வீட்டின் மதிப்புவிலையை மட்டும் செலுத்தும் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதை ஹட்டன்ஸ் ஏஷியா நிறுவனத்தின் மூத்த ஆய்வு இயக்குநர் லீ சு டெக் சுட்டிக்காட்டினார்.
இரண்டாம் காலாண்டில் 6,819 வீவக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன. இது முதல் காலாண்டில் விற்கப்பட்ட 6,934 வீடுகளைவிட 1.7 விழுக்காடு குறைவாகும்.
விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக குறைந்துள்ளது.

