பலதுறை மருந்தகங்களில் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விரும்பும் 80 வயதுக்கும் குறைந்தவர்கள் இனி அதற்கு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். சுகாதார அமைச்சு நேற்று இதைத் தெரிவித்தது. இங்குள்ள 23 பலதுறை மருந்தகங்களும் உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மேலும் சிறப்பாக சிகிச்சை அளிக்க இது உதவும் என்று அமைச்சு கூறியது.
கடந்த இரண்டு வாரங்களாக, கொவிட்-19 தொற்று உள்ளிட்ட கடும் சுவாசப் பிரச்சினைகளுக்காக பலதுறை மருந்தகங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் அன்றாட சராசரி எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டது.
இதனால் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதியவர்கள் மட்டுமே முன்பதிவு செய்யாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள பலதுறை மருந்தகங்களுக்குச் செல்லலாம் என்றது அமைச்சு.
தீவின் பத்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கிருமிப் பரிசோதனை, தடுப்பூசிக்கான கூட்டு நிலையங்களுக்குப் பொதுமக்கள் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த நிலையங்களுக்கு செல்ல முன்பதிவு தேவையில்லை.
இதற்கிடையே மருத்துவமனைகளில் பெரியவர்களுக்கான அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கடந்த வாரங்களாக தினமும் சராசரியாக 2,500 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். வழக்கமாக அன்றாடம் 2,000 நோயாளிகளைத்தான் அவசர சிகிச்சைப் பிரிவுகள் கையாளும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
கேகே மகளிர் சிறார் மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கடந்த இரண்டு வாரங்களாக தினமும் 680 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். வழக்கமாக இந்த எண்ணிக்கை நாளுக்கு 450ஆக இருக்கும் என்று அமைச்சு கூறியது.
இவற்றில் 40 விழுக்காட்டுச் சம்பவங்களில் அவசர சிகிச்சை தேவைப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், கட்டுக்கடங்காத ரத்தக் கசிவு போன்ற கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்துள்ள அவசரநிலை களுக்கு மட்டுமே மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும்படி அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
அத்துடன், ஜூரோங், ஈசூன் பலதுறை மருந்தகங்களில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் நோவோவேக்ஸ் தடுப்பூசி மட்டுமே வழங்கப்படும் என்று அமைச்சு தெரிவித்தது. தற்போது அங்கு ஃபைசர் தடுப்பூசியும் போடப்படுகிறது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி வரைதான் அங்கு ஃபைசர் தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசி அல்லது இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியாக போட்டுக்கொள்ள முடியும்.