சிங்கப்பூரில் 6.1 மில்லியன் வெள்ளி அளவிற்கு நடைபெற்ற மோசடியின் தொடர்பில் 343 பணமோசடிப் பேர்வழிகளிடம் காவல்துறை விசாரணை நடத்துகிறது. வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவும் சிங்கப்பூர் காவல்துறையும் இணைந்து இம்மாதம் எட்டாம் தேதி முதல் 21ஆம் தேதிவரை நடத்திய இரண்டு வார தீவு தழுவிய பண மோசடி ஒழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
14லிருந்து 78 வயதுக்கு உள்பட்ட சந்தேக நபர்களில் 236 ஆண்களும் 107 பெண்களும் அடங்குவர். அவர்கள் இணையக் காதல், மின் வர்த்தகம், ஆள்மாறாட்டம், முதலீடு, வேலை, கடன் மோசடி போன்ற 857க்கும் அதிகமான வழக்குகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்ததென காவல்துறை நேற்று தெரிவித்தது.
கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்குவது தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 500,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சிங்கப்பூரில் உரிமம் பெறாத எந்தவொரு பணம் வழங்கும் சேவை தொடர்பான குற்றத்திற்கும் 125,000 வெள்ளிக்குக் குறையாத அபராதம், குறைந்தபட்சம் மூவாண்டுச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சென்ற ஆண்டு சிங்கப்பூரில் பண மோசடிச் செயல்களின் மூலம் 633 மில்லியன் வெள்ளி பறிக்கப்பட்டது. இந்தத் தொகை, 2020ஆம் ஆண்டு பறிபோன 268.4 மில்லியன் வெள்ளியைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகம்.
சிங்கப்பூரில் இடம்பெறும் பண மோசடிகளில் 90 விழுக்காடு வெளிநாடுகளில் திட்டமிடப்பட்டு, தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தோரால் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாரத் தொடக்கத்தில் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் பண மோசடி அழைப்புகள், குறுந்தகவல்கள் ஆகியவற்றின் தொடர்பிலான விசாரணைகளில் உதவிக்கொள்ள வகைசெய்யும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

