யுகேஷ் கண்ணன்
தான் செல்ல விரும்பிய பல்கலைக்கழகம், எட்டா கனியாகிவிடக்கூடாது என்பதற்காக பள்ளியின் படத்தை அறை சுவரில் ஒட்டி, ஒவ்வொரு நாளும் அதைப் பார்த்துத் தன் இலக்கை அடைய வேண்டும் என்ற வெறியுடன் படித்தவர்தான் ஃபயாஸ்.
பொதுவாக உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் விரைவுநிலைக்குத் தகுதிபெறாவிட்டால் தொடக்கக்கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் செல்வது சிரமமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அத்தகைய எண்ணங்களை உடைத்தெறியும் வகையில் 26 வயது முகமது ஃபயாஸ் முகமது ஃபகார் சாதித்துக் காட்டியுள்ளார்.
உயர்நிலைப்பள்ளியில் சாதாரண நிலை மாணவராக இருந்த இவர், இவ்வாண்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மதிப்புக்குரிய 'வேலடிக்டோரியன்' எனும் பிரிவுபசார சொற்பொழிவாற்றும் மாணவர் தகுதிக்கு உயர்ந்துள்ளார்.
அரசியல்சார் அறிவியல் துறையில் உயரிய இளங்கலை 'ஹானர்ஸ்' பட்டத்துடன் வரலாற்றுப் பாடத்திலும் பட்டம் பெற்றுள்ளார்.
சாதா முதல் சாதனை வரை...
நீ ஆன் தொடக்கப்பள்ளியில் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய ஃபயாஸ், ஒரு சராசரி மாணவராகத்தான் இருந்தார்.
தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுக்காக கடினமாக உழைத்தபோதும் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியவில்லை என்று பகிர்ந்துகொண்டார்.
இவரின் நண்பர்கள் பலர், உயர்நிலைப்பள்ளியில் விரைவுநிலைக்குத் தகுதிபெற, ஃபயாஸ் சாதாரண நிலையில் படிக்க நேரிட்டது. இது தமக்குப் பெரும் பின்னடைவாகத் தோன்றியபோதும் மனதைத் தேற்றிக்கொண்டு நீ ஆன் உயர்நிலைப்பள்ளியில் தன் படிப்பைச் வழக்கநிலையில் தொடர்ந்தார் ஃபயாஸ்.
லட்சியம் அதிகம் இல்லாது இருந்த அவரைத் தட்டி எழுப்பிய ஆண்டாக உயர்நிலை மூன்று அமைந்தது.
கற்றல் பயணங்களுக்காக விரைவுநிலை மாணவர்கள் தொடக்கக்கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் வழக்கநிலை மாணவர்கள் பெரும்பாலும் பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டதை அவர் கவனித்தார்.
'வழக்கநிலை மாணவர்களால் தொடக்கக்கல்லூரிக்குச் செல்ல முடியாதா? செல்வதற்கான முயற்சியை எடுத்தால்?' போன்ற கேள்விகள் இவர் மனதில் எழத் தொடங்கின.
தொடக்கக்கல்லூரிக்குச் சென்றாக வேண்டும் என்ற குறிக்கோள் அவர் மனதில் ஆழப் பதிந்தது.
நண்பர்கள் இவர் லட்சியக் கனவை அறிந்து ஏளனமாகச் சிரித்தனர்.
ஆனால், ஃபயாஸ் சோர்ந்துபோகாமல் தனது வழக்கநிலைத் தேர்வை முடித்தார். உயர்நிலை ஐந்துக்கு முன்னேறி, சாதாரணநிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சியும் பெற்றார். ஈசூன் தொடக்கக்கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தார்.
தூரம் ஒரு பொருட்டல்ல...
பள்ளி செல்வதற்காக உபி வட்டாரத்தில் வசிக்கும் இவர், தினமும் ஈசூன் வரை பயணம் செய்தார். அந்தப் பயணங்களால் களைப்பு ஏற்பட்டபோதும் லட்சியத்தை நோக்கிய பயணமாகத்தான் ஃபயாஸ் அவற்றைக் கருதினார். ஆனால், அவருக்கு அடுத்த கவலை காத்திருந்தது.
'தொடக்கக்கல்லூரிக்கு வந்துவிட்டோம், அடுத்து என்ன?' என்ற கேள்வி அவருள் உதித்தது.
தனது தொடக்கக்கல்லூரியிலிருந்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்குத் தகுதிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதை உணர்ந்தார். எப்படியாவது அதே பல்கலைக்கழகத்தில் மாணவராக இணைய வேண்டும் என்று முடிவெடுத்தார்.
லட்சியக் கனவு மெய்ப்பட...
பள்ளி முடிந்ததும் பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்று தன் பள்ளிப் பாடங்களைப் படிக்கத் தொடங்கினார்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான அனைத்துத் தகுதிகளும் தனக்கு உண்டு என்ற எண்ணத்தைத் தன்னுள் விதைத்தார்.
பல்கலைக்கழகத்தின் சுவரொட்டி ஒன்றைத் தன் அறையில் ஒட்டினார் ஃபயாஸ். சோர்வும் சோம்பலும் தோன்றுவதாக இருந்தால் உடனே அந்தச் சுவரொட்டியைப் பார்த்து மீண்டும் தான் இழந்த ஊக்கத்தைப் பெற்றதாக இவர் கூறுகிறார்.
தன் தொடக்கக்கல்லூரி நண்பர்களும் ஆசிரியர்களும் அத்தருணங்களில் பெரும் ஆதரவாக இருந்தனர் என்றும் தெரிவிக் கிறார்.
மேல்நிலைத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறாதபோதும் நம்பிக்கையுடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கலைகள், சமூக அறிவியல் பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பித்தார்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஃபயாஸ் மனமுடைந்து போனார். வேறு பல்கலைக்கழகத்திற்குச் செல்லத் தயாரானார்.
ஆனால், இரு வாரங்களில் அவர் விண்ணப்பித்த பல்கலைக்கழகத் துறையிலேயே இடம் இருந்த காரணத்தால் நினைத்தபடியே அங்கு இணைந்தார் ஃபயாஸ்.
கவலைகள் கிடக்கட்டும்...
நினைத்தது நடந்துவிட்டது என்ற மனநிறைவுடன் தனது இளங்கலை பட்டப்படிப்பைத் தொடங்கிய ஃபயாஸ், அடுத்த தடைக்கல்லைச் சந்தித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழல் காரணமாக பயண முகவர்களான தன் பெற்றோர் இருவரும் தங்கள் வேலையை இழந்தனர். தனது செலவுகளைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார் ஃபயாஸ்.
பள்ளி முடிந்தபின் மாலை நேரங்களில் ஒரு துணைப்பாட ஆசிரியராக மாறினார். வட்டியில்லா கடன் ஒன்றை 'மெண்டாக்கி' அவருக்கு வழங்கியது.
மேலும், ஊக்கத் தொகைத் திட்டங்களின்கீழ் இவரது பள்ளியும் பல்வேறு உதவிகளைச் செய்தது.
இருப்பினும் அவ்வப்போது செலவுகளைச் சமாளிப்பது கடினமாக இருந்ததாக விளக்குகிறார்.
சவால்மிக்க இந்தச் சூழலில் பல்கலைக்கழகப் படிப்பில் தேற முடியுமா என்ற கேள்வி அவருள் எழுந்தது.
முடிந்தவரை முயற்சி செய்வோம், இறுதியில் வருத்தம் ஏதுமில்லாமல் தேர்ச்சி பெறுவோம், பாடங்களை விரும்பிப் படிப்போம் என்று தனக்குள் கூறிக்கொண்டு தன் கல்விப் பயணத்தை உற்சாகத்துடன் தொடர்ந்தார்.
அந்தத் திடமே அவருக்கு வெற்றிக்கனியை இன்று பெற்றுத் தந்துள்ளது.
தகுதி என்பது...
ஒருவரது தகுதி என்பது தன் மனம் முடிவுசெய்வதைப் பொறுத்தே உள்ளது என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார் ஃபயாஸ்.
பாதுகாப்பு சார்ந்த துறையில் நாட்டமுள்ள ஃபயாஸ், தற்போது 'எவெர்ப்பிரிட்ஜ்' நிறுவனத்தில் அபாயநிலை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.
தனது வட்டாரத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு முகமது ஃபாமி அலிமானுடன் இணைந்து பல தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் சமூகத்திற்கும் பங்காற்றி வருகிறார் இந்த இளையர்.
வாழ்வில் என்றும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயமென நம்புவதுடன் தன் வாழ்க்கை மூலம் அதை நிரூபித்தும் காட்டியுள்ளார் ஃபயாஸ்.

