ஹர்ஷிதா பாலாஜி
ஓவியங்கள் மூலம் பிறர் ஆனந்தமும் ஆறுதலும் பெறவேண்டும் என்ற உயரிய குறிக்கோளைக் கொண்டுள்ள ஆன்யா, 'டயானா' விருதைப் பெற்றுள்ளார். மறைந்த பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் நினைவாகத் தொடங்கப்பட்டது இவ்விருது. இளவரசி டயானாவின் மகன்கள் இளவரசர்கள் வில்லியம், ஹேரி ஆதரிக்கும் அறநிறுவனத்தின்கீழ் இம்மாதம் ஒன்றாம் தேதியன்று 16 வயது ஆன்யா ராவ்க்கு இவ்விருது வழங்கப்பட்டது.
இளைய தலைமுறையினரைச் சமூகத்துக்குத் தொண்டாற்றும்படி ஊக்குவிக்கும் 29 நாடுகளைச் சேர்ந்த 180 இளையர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
தந்தையின் 'டயாலிசிஸ்' சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்றுவந்த ஆன்யா, அங்கிருந்த அறைகளின் வெற்றுச் சுவர்களைக் கவனித்தார். அவற்றை வண்ணமயமாக்கு வதால் மருத்துவமனைக்கு வருவோரை மகிழ்விக்க முடியும் என்று நினைத்தார்.
அதனால் கலைகள், ஓவியம் வரைதல் போன்றவற்றின் மூலம் பிறரது மனநலனை மேம்படுத்தும் நோக்கில் 2020ஆம் ஆண்டில் 'ஆர்ட்: கனெக்ட்' என்ற லாபநோக்கமற்ற அமைப்பை ஆன்யா தொடங்கினார். நண்பர்களுடன் சேர்ந்து உருவான இந்த அமைப்பில் தற்போது சுமார் 40 மாணவத் தொண்டூழியர்கள் உள்ளனர்.
மருத்துவத்துறை, சுகாதாரப் பராமரிப்புத் துறை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதில் கவனம் செலுத்திவருகிறது அமைப்பு.
இதுவரை பல தாதிமை இல்லங்களில் முதியவர்களுக்காக ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் நிகழ்ச்சிகளுக்கு 'ஆர்ட்:கனெக்ட்' ஏற்பாடு செய்துள்ளது.
அத்துடன், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வை ஓர் ஓவியப் போட்டியின் மூலம் உணர்த்தவும் அமைப்பு முற்பட்டது.
"அமைப்பைத் தொடங்கிய காலத்தில் தாதிமை இல்லத்தில் இருந்த முதியவர்களுடன் உறவாடச் சிரமமாக இருந்தது. சக இளையர்களுடன் பழகுவது எளிது. ஆனால் தலைமுறை இடைவெளி காரணத்தால் முதியவர்களுடன் பழக நாங்கள் சற்று சிரமப்பட்டோம்," என்றார் ஆன்யா.
இருப்பினும் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக தொண்டூழியர்களைத் திரட்டுவதற்குத் தொடக்கப்பள்ளிகள், அனைத்துலகப் பள்ளிகள் ஆகியவற்றை ஆன்யா தீவிரமாக அணுகினார்.
ஆன்யாவின் உயர்ந்த குறிக்கோளை அங்கீகரிக்கும் வகையில் அவரின் ஆசிரியர் அவரை 'டயானா' விருதுக்காக நியமனம் செய்தார். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 நீதிபதிகள் நியமனங்களை ஆராய்ந்தபின் ஆன்யாவுக்கு 'டயானா' விருது வழங்கப்பட்டது.
"ஆர்ட்:கனெக்ட் அமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்வது எனக்கு ஒருவித நிம்மதியைத் தருகிறது. நண்பர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடுவதும் தொண்டூழியம் செய்வதும் எங்களின் மனவுளைச்சலைக் குறைக்கவும் உதவுகிறது," என்றார் ஆன்யா.
அமைப்பு மேலும் பல பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் மற்ற நாடுகளில் 'ஆர்ட்: கனெக்ட்' அறிமுகம் காண வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறுகிறார் இந்த இளம் சமூக ஆர்வலர்.

