தற்காலிகக் கட்டணக் காலத்தை கிராப், கோஜெக் நீட்டிப்பு
தனியார் வாடகை வாகனச் சேவை வழங்கும் கிராப் மற்றும் கோஜெக் நிறுவனங்கள், அவற்றின் ஓட்டுநர்-பங்காளிகள் தொடர்பில் நடைமுறைப்படுத்திய தற்காலிகக் கட்டணக் காலத்தை ஆண்டிறுதிவரை நீட்டித்துள்ளன. உயரும் எரிபொருள் விலையை ஓட்டுநர்கள் சமாளிப்பதற்காக இந்தத் தற்காலிகக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி மார்ச் 31ஆம் தேதிமுதல், பத்து கிலோமீட்டருக்குக் குறைவான பயணங்களுக்கு 50 காசு, அதற்கும் அதிக தூரப் பயணங்களுக்கு 80 காசு எனக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கோஜெக் அறிவித்திருந்தது. அனைத்துப் பயணங்களுக்கும் 50 காசு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கிராப் அறிவித்தது. இம்மாதம் 31ஆம் தேதிவரை இந்தக் கூடுதல் கட்டணம் நீடிக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இனி, டிசம்பர் 31ஆம் தேதிவரை இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. ஓட்டுநர்-பங்காளிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கவும் வருமானத்தில் ஒரு நிலைத்தன்மை இருக்கவும் இந்த நீட்டிப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செங்காங்கில் மிதிவண்டி ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்த வழிகள்
செங்காங் வட்டாரத்தில் மிதிவண்டிப் பயண அனுபவத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்குமாறு வட்டாரவாசிகளுக்கு இணையவழி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளில் வட்டாரத்தின் சாலைகளையும் நடைபாதைகளையும் மிதிவண்டி ஓட்டிகள் அதிகம் பயன்படுத்திவரும் நிலையில் செங்காங்கில் கூடுதல் கட்டமைப்பு தேவைப்படுவதற்கு இடையே இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது 2 கிலோமீட்டருக்கும் குறைவான மிதிவண்டிப் பாதைகள் செங்காங் வட்டாரத்தில் அமைந்திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது. இந்நிலையில், எம்ஆர்டி ரயில் வசதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் செங்காங் வட்டாரத்தின் பெரும்பகுதி அமைந்திருந்தாலும் போக்குவரத்து முனையங்களுக்கும் பூங்கா இணைப்புகளுக்கும் தற்போதைய மிதிவண்டிப் பாதைகள் சிறந்த முறையில் இணைக்கப்படவில்லை என்று செங்காங் எம்பிக்கள் ஃபேஸ்புக்வழி குறிப்பிட்டுள்ளனர்.
'தீச்சம்பவ காப்புறுதி மட்டும் போதாது'
உங்கள் வீட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டு அதனால் நேரும் முழுச் செலவுகளையும் ஈடுகட்டுவதற்கு, தீச்சம்பவக் காப்புறுதித் திட்டம் இருந்தால் மட்டும் போதாது என்கின்றன காப்புறுதி நிறுவனங்கள். இல்லக் காப்புறுதித் திட்டம் ஒன்றையும் வீட்டு உரிமையாளர்கள் வைத்திருப்பது அவசியம் என்று நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. தீச்சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட கட்டடப் பகுதிகளைச் சரிசெய்வதற்கான தொகையை மட்டுமே தீச்சம்பவக் காப்புறுதித் திட்டத்தின்கீழ் கோர முடியும். ஆனால் சேதமடைந்த உடைமைகளுக்கும் சிதைவுகளை அகற்றுவதற்கும் வீட்டைப் புதுப்பிக்கும் சமயத்தின்போது மாற்று ஏற்பாடுகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வல்லது இல்லக் காப்புறுதித் திட்டமே. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கட்டாய தீச்சம்பவக் காப்புறுதித் திட்டம் மட்டும் போதுமானது என்று மக்கள் நினைப்பது தவறு என்றும் கூறப்படுகிறது. தங்கள் வீட்டில் தீச்சம்பவம் நேர்ந்த பின்னரே இல்லக் காப்புறுதித் திட்டம் வாங்காததை எண்ணி வருந்தியதாகச் சிலர் தெரிவித்துள்ளனர்.

