சிங்கப்பூரில் ஆக அதிக வருமானத்தை ஈட்டும் பிரிவினருக்கு மற்ற வருமானப் பிரிவினரைக் காட்டிலும் உயரும் பயனீட்டாளர் விலைகளால் இவ்வாண்டின் முதல் பாதியில் பெரும் பாதிப்பு நேர்ந்ததாக புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
அத்துறை நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, ஆக அதிக வருமானமுள்ள நாட்டின் முதல் 20 விழுக்காட்டினருக்குப் பயனீட்டாளர் விலைகள் தொடர்பில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பதிவான அதிகரிப்பு 6%ஆக இருந்தது.
ஆகக் குறைந்த வருமானம் ஈட்டுவோர், அதாவது நாட்டின் கடைசி 20 விழுக்காட்டினர், 4.2% அதிகரிப்பையும் இடைப்பட்ட நடுத்தர வருமானமுடைய 60 விழுக்காட்டினர் 4.9% அதிகரிப்பையும் இதே காலகட்டத்தில் உணர்ந்ததாகக் கூறப்பட்டது.
கார்கள், பெட்ரோல், இதர போக்குவரத்துச் சேவைகள் போன்றவற்றின் விலை இவ்வாண்டு கணிசமாக உயர்ந்துவிட்டதால் அவை அதிக வருமானம் ஈட்டுவோர் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் தொலைத்தொடர்புச் சேவைகளுக்காக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் அனைத்து வருமானப் பிரிவினரும் குறைந்த கட்டணம் செலுத்தியுள்ளதாக புள்ளிவிவரத் துறை குறிப்பிட்டுள்ளது.

