சிங்கப்பூரில் பத்தில் எட்டு
முதலாளிகள் நீக்குப்போக்கான வேலை நடைமுறையை அனுமதிக்கின்றனர்.
ஆனால் இதுகுறித்து பலருக்குத் தெரியவில்லை என்று
மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.
அந்த நிறுவனங்களின் ஊழியர்கள், வேலை தேடுவோர் ஆகியோருக்கும்கூட நீக்குப்போக்கான வேலை தெரிவு குறித்து தெரியாது என்றார் அவர்.
எனவே, நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு தொடர்பாக முத்
தரப்பு பங்காளித்துவத் தரநிலையை நிறவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புவதாக டாக்டர் டான் கூறினார்.
அப்போதுதான் திறனாளர்களை இந்த நிறுவனங்களால் ஈர்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டுக்குக் கோரிக்கை விடுக்கும் முறை, கோரிக்கை ஆராயப்படும் முறை, கோரிக்கை குறித்த
முடிவுகளை ஊழியர்களிடம் தெரிவித்தல் ஆகியவை முத்தரப்புப் பங்காளித்துவத் தரநிலையில்
அடங்கும்.
டிபிஎஸ் ஃபியூச்சர் ஃபார்வர்ட் வாரத்தின் அறிமுக விழாவில் நேற்று கலந்துகொண்ட டாக்டர் டான், இது குறித்து உரையாற்றினார். எதிர்காலத்துக்காக உள்ளூர் ஊழியர்களை டிபிஎஸ் வங்கி தயார்ப்படுத்துகிறது என்று டாக்டர் டான் பாராட்டினார்.
டிபிஎஸ் வங்கி தனது ஊழியர்களை மீண்டும் பயிற்சிகளுக்கு அனுப்புவதையும் நிறுவனத்தின் வளர்ச்சியில் தங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை ஊழியர்களை அது உணரவைப்பதையும் டாக்டர் டான் சுட்டினார்.
தமது உரையின்போது கிளவுட் பொறியாளரான 32 வயது பிரயன் சோங், சொத்து நிர்வாக மேலாளரான 48 வயது திருவாட்டி
பரமேஸ்வரி ராஜேந்திரன் ஆகியோரை டாக்டர் டான் பாராட்டினார். கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது திரு சோங் தமது வேலையை இழந்ததாகக் கூறிய டாக்டர் டான், அதையடுத்து அவர் டிபிஎஸ் வங்கியில் இணைந்த
தாகக் கூறினார். டிபிஎஸ் வங்கியில் இணைந்ததும் அவர் இணையப் பாதுகாப்பு உட்பட தகவல் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டதாக அமைச்சர் டான் தெரிவித்தார்.
டிபிஎஸ் வங்கியின் முன்களப் பணியாளராகத் தொடங்கிய திருவாட்டி பரமேஸ்வரி பகுதிநேரப் பட்டயக் கல்வியில் சேர்ந்து தமது திறன்களை மேம்படுத்தி படிப் படியாக உயர்ந்திருப்பதாக டாக்டர் டான் கூறினார். கிட்டத்தட்ட 260,000 பெண்களும் 120,000 ஓய்வுபெற்றவர்களும் ஊழியர் அணிக்கு வெளியே இருப்பதாகவும் தற்போது நிலவும் கடுமையான தொழிலாளர் சந்தையில் அவர்களை நிறுவனங்கள் ஈர்க்க வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்.

