உயர்ந்துவரும் விலைவாசி, ஏற்ற இறக்கமான சந்தைகள் ஆகியவற்றுக்கு இடையிலும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான ஜிஐசி இவ்வாண்டு நிலையான வருவாயைப் பதிவுசெய்து உள்ளது.
இருப்பினும், முதலீட்டாளர்களுக்கான சூழல் இன்னும் சவால்மிக்கதாகவே உள்ளது என்றும் விரிவான சந்தை வருவாய் குறையும் சாத்தியம் உள்ளது என்றும் ஜிஐசி கூறியுள்ளது. சிங்கப்பூரின் நிதிக் கையிருப்பை நிர்வகிக்கும் மூன்று தனித்துவ நிறுவனங்களுள் ஜிஐசியும் ஒன்று.
இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் 20 ஆண்டுக்கான வருடாந்திர லாபம் 4.2 விழுக்காடு என ஜிஐசி பதிவு செய்து உள்ளது.
அதாவது, 2003ஆம் ஆண்டு $100 முதலீடு செய்திருந்தால் தற்போது அந்தத் தொகை $228ஆக லாபத்துடன் சேர்ந்து அதிகரித்திருக்கும். இந்த லாபத்தைக் கணக்கிடும்போது பணவீக்க நிலவரமும் கவனத்தில் கொள்ளப்படும்.
இதற்கிடையே, தற்போதைய முதலீட்டு நிலவரம் தீவிர நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கி இருப்பதாக ஜிஐசி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லிம் சோவ் கியாட் தெரிவித்து உள்ளார்.
"பொருளியல் விரைந்து மீட்சிஅடைய வேண்டிய கட்டாயத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டிய நிலையில், பொருளியல் நிலவரம் பணவீக்கத்தின் பிடியில் சிக்கி உள்ளது. விநியோகத் தொடர் இடையூறுகளும் குறுக்கே நிற்கின்றன. இவற்றுடன், புவிசார் அரசியல் பதற்றம் தொடர்ந்து அதிகரிப்பதால் உலகம் கடுமையான இடர்ப்பாடுகளை எதிர்நோக்குகிறது. இப்படிப்பட்ட நிலையில் பரவலான சந்தை வருவாய் குறையக்கூடும். வருவாய் ஈட்டக்கூடிய வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை," என்றார் திரு லிம்.
ஜிஐசியின் வருவாய் நிலைத்தன்மை சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்ட செலவினத்திற்கு உதவக்கூடும்.
ஜிஐசியில் திரட்டப்படும் நீண்டகால முதலீட்டு முதலீட்டு வருவாயில் 50 விழுக்காடு வரை அரசாங்கம் செலவு செய்யலாம் என தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் தெரிவித்து இருந்தன.
இந்த நிதி ஆண்டுக்கான எம்ஐஆர்சி எனப்படும் நிகர முதலீட்டு வருவாய் பங்களிப்பு $21.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், சிங்கப்பூர் நாணயம் வலு
வடைந்ததன் காரணமாக வெளிநாட்டு நாணயக் கையிருப்பு மதிப்பில் $7.4 பில்லியன் நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதால் இம்முறை எம்ஐஆர்சிக்கு பங்களிக்கப்போவதில்லை என சிங்கப்பூர் நாணய ஆணையம் கடந்த வாரம் கூறியிருந்தது.

