எஸ்ஐஏ எஞ்சினியரிங் லாபம்
11.7 விழுக்காடு சரிவு
இவ்வாண்டின் முதல் காலாண்டில் எஸ்ஐஏ எஞ்சினியரிங்கின் லாபம், ஆண்டு அடிப்படையில் 11.7 விழுக்காடு குறைந்து $12.8 மில்லியனாகப் பதிவானது.
அரசாங்கம் வழங்கிய சம்பள ஆதரவைச் சேர்க்காமல் முதல் காலாண்டிலிருந்து கடந்த மாதம் இறுதி வரை
$4.2 மில்லியன் லாபத்தை மட்டுமே அது ஈட்டியது.
முதல் காலாண்டு வருமானம் 36.9 விழுக்காடு அதிகரித்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு பதிவான விமானச் சேவை எண்ணிக்கையில் 55 விழுக்காடு விமானச் சேவைகள் கடந்த மாதம் பதிவாகின.
எஸ்ஐஏ கையாண்ட விமானச் சேவைகள் காலாண்டு அடிப்படையில் 42 விழுக்காடு அதிகரித்துள்ளன. ஆண்டு அடிப்படையில் இது இருமடங்கு உயர்ந்துள்ளது. விமானப் போக்குவரத்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் தென்பட்டன.
சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி 2.2% மட்டுமே ஏற்றம் கண்டது
சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் 2.2 விழுக்காடு மட்டுமே ஏற்றம் கண்டு ஏமாற்றத்தை அளித்துள்ளது. புளூம்பர்க் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்களின் 5.4 விழுக்காடு முன்னுரைப்பைவிட இது மிகவும் குறைவு. தொழிற்சாலை உற்பத்தி கடந்த மே மாதம் 10.4 விழுக்காடு அதிகரித்தது. அதனுடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் பதிவான உற்பத்தி குறைவு.
ஏற்ற இறக்கமாக இருந்த உயிர்மருத்துவ உற்பத்தித் துறையைச் சேர்க்காவிடில் கடந்த மாதம் பதிவான உற்பத்தி விகிதம் 4.2 விழுக்காடாகும். கடந்த மே மாதம் 22.9 விழுக்காடு வளர்ச்சி கண்ட மின்னணுவியல் துறையின் கடந்த மாத வளர்ச்சி 2.3 விழுக்காடாகப் பதிவாகி மெதுவடைந்தது.
மே மாதம் 32.1 விழுக்காடு ஏற்றம் கண்ட குறைகடத்தி துறை கடந்த மாதம் 2.6 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி கண்டது.
டோனி டானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய எஸ்எம்யு
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தைத் திறக்க பங்களித்ததற்கு முன்னாள் அதிபர் டோனி டான் கெங் யாமுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த பல்கலைக்கழகத்தைத் திறக்கும் நோக்குடன் 1997ஆம் ஆண்டிலிருந்தே அவர் திட்டங்களை வகுத்துள்ளார். அப்போது துணைப் பிரதமராக இருந்த அவர், சிங்கப்பூரின் உயர்கல்வித் துறையையும் மேற்பார்வையிட்டார்.
"1997ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நான் பேசியபோது மூன்றாவது பல்கலைக்கழகத்தை அமைப்பது குறித்த பரிந்துரையை முன்வைத்தேன். 2000ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் பொருளியலுக்கு 17,000 பட்டதாரிகள் தேவைப்படுவர் என்று தெரிவித்திருந்தேன். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் ஆண்டுக்கு 10,000 பட்டதாரிகளை மட்டுமே உருவாக்க முடியும்," என்றார் டாக்டர் டான்.
'377ஏ சட்டப் பிரிவை ரத்து
செய்ய வேண்டாம்'
திருமணம், குடும்பம் என்ற பாரம்பரிய வரையறையைப் பாதுகாக்கும் வரை, ஆண்களுக்கிடையிலான பாலியல் உறவைக் குற்றமாக்கும் சட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்று ஒரு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
'புரொடெக்ட் சிங்கப்பூர் டவுன்ஹால்' என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அந்தக் குழு கடந்த சனிக்கிழமை சிங்கப்பூர் எக்ஸ்போ மாநாட்டு மையத்தில் ஒரு நிகழ்வை நடத்தியது, இதில் 1,200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
"நமது திருமணம், குடும்பம் ஆகியவற்றிற்கு போதுமான பாதுகாப்புகள் இருக்கும் வரை, 377ஏ சட்டப் பிரிவை ரத்து செய்யக்கூடாது என்றும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். அரசியலமைப்பில் ஆண்-பெண் திருமணத்தை உள்ளடக்கியது இதில் அடங்கும்." என்று அக்குழு கூறியது.
அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யும் நிலையில், அரசாங்கம் அண்மைய மாதங்களில் சிங்கப்பூரர்களின் பல்வேறு குழுக்களுடன் இந்தச் சட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது, சட்டம் - தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377A - தீவிரமாக அமல்படுத்தப்பட வில்லை. இது 2007ல் நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டதிலிருந்து அதிகாரிகளால் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
சிங்கப்பூரில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 10வது நபர்
சிங்கப்பூரில் மேலும் ஒரு குரங்கம்மைத் தொற்று சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் பத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அண்மையில் கனடாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய
28 வயது தைவானிய ஆடவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

