'ஃபெசிலிட்டிஸ் மேனேஜ்மென்ட்' எனும் ஒரு கட்டடத்தின் பல்வேறு அம்சங்களையும் வசதிகளையும் கவனித்துக்கொள்ளும் கட்டட மேலாண்மை நிறுவனங்களின் பொறுப்பு மாறி வருவதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் குறிப்பிட்டுள்ளார். கட்டடங்களின் பகுதிகளைச் சரிவரக் கவனிப்பது மட்டுமின்றி அவற்றைக் கட்டடத்தில் உள்ளவர்களின் நலனை மேம்படுத்தும் வண்ணம் அமைக்கும் பொறுப்பும் தற்போது கட்டட மேலாண்மைத் துறை நிறுவனங்களுக்கு இருப்பதாக அவர் சுட்டினார்.
"அடிப்படை அம்சங்களையும் கட்டமைப்பையும் தாண்டி ஒரு கட்டடம் அதில் இருப்பவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படவேண்டும்," என்று 'வோர்ல்ட் வொர்க்பிளேஸ் ஏஷிய-பசிபிக்' எனும் தொழில்துறை நிகழ்ச்சியின் தொடக்க உரையை ஆற்றியபோது திரு ஹெங் சொன்னார். கட்டட மேலாண்மைத் துறைக்குத் தொழில்நுட்பம் பலனளிக்கக்கூடும் என்றாலும் திட்டமிடாமல் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.
"பாதுகாப்பு, துப்புரவுப் பணிகளுக்கு ஒருவர் இயந்திர மனிதர்களைப் பயன்படுத்தலாம். ஆனால், வெவ்வேறு தளங்களுக்குச் செல்வதற்கு அத்தகைய இயந்திர மனிதர்கள் எவ்வாறு மின்தூக்கிகளை உபயோகிக்கும், தங்களுக்கிடையே எவ்வாறு தொடர்புகொள்ளும்," என்று திரு ஹெங் உதாரணம் காண்பித்தார்.
எனினும், கட்டட மேலாண்மைத் துறை தழைக்கவும் திறமையான ஊழியர்களை ஈர்க்கவும் கட்டடத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் முறை பின்பற்றப்படவேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
"கட்டட மேலாண்மைத் துறை வேலைகள், மனத்தளவிலும் உடல் ரீதியாகவும் சிரமத்தைத் தரும் 24 மணிநேரத்திற்கும் தயார்நிலையில் இருக்கவேண்டியவை என்ற கருத்து பலரிடையே உள்ளது. அதனால் இத்துறைக்கு ஊழியர்களை ஈர்ப்பது சவாலாக இருக்கிறது," என்று 'சிஃப்மா' எனும் சிங்கப்பூர் அனைத்துலகக் கட்டட மேலாண்மை சங்கத்தின் உத்தி, புத்தாக்கப் பிரிவின் தலைவரான திரு ஜி. சேகர் கூறினார்.
உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கட்டடங்களின் நிலையை அறிய உணர்கருவிகளையும் கேமராக்களையும் கட்டட மேலாண்மைத் துறை நிறுவனங்கள் பயன்படுத்தலாம். அதிக உயரத்திலிருந்து கட்டடத்தின் முன்பகுதியைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தலாம்.
இதுபோன்ற நவீன தொழில்நுட்ப முறைகளின் மூலம் கட்டட மேலாண்மைத் துறை வேலைகள் குறித்த கருத்துகள் மாறலாம் என்று அவர் சொன்னார்.
இத்தகைய வழிகளின் வாயிலாக குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் வேலையில் அமர்த்தப்படும்போது அது கட்டட செயல்பாட்டுத் துறை எதிர்நோக்கும் மனிதவளப் பற்றாக்குறைக்கும் தீர்வாக அமையலாம் என்பதைத் திரு சேகர் குறிப்பிட்டார்.
கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிந்திய காலத்தில் கட்டட மேலாண்மைத் துறை தழைக்க அது இயந்திரவியல், பொருள்களின் இணையம், அதிக திறன்கள் இருப்போரைக் கொண்டிருப்பது ஆகிய மூன்று அம்சங்களையும் பின்பற்றவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

