சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் ஓர் ஆடவர் பல பெண்களை ஏமாற்றி 72,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறித்துள்ளார்.
ஏற்கெனவே பல பெண்களை ஏமாற்றியதற்காக 49 வயது டான் சிப் ஹுவாட்டுக்கு 2013ஆம் ஆண்டு ஏழு ஆண்டுகள் சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளுமாறு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவடைந்த பிறகு 2020ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் மேலும் 10 பெண்களை ஏமாற்றியிருக்கிறார்.
டான் அந்தப் பெண்களை சென்ற ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஏமாற்றினார். அவர்களில் குறைந்தது நான்கு விலை மாதரும் அடங்குவர்.
விளம்பர இணையத்தளமான லொக்கான்டோவில் தனக்கு இளம் பெண் தேவை என்று விளம்பரம் தந்திருந்தார்.
தான் நிதித் துறையில் பணியாற்றுவதாகவும் தனது மாதச் சம்பளம் 60,000 வெள்ளிக்கும் மேல் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையிலேயே டானின் மாதச் சம்பளம் 2,000 வெள்ளிக்கும் குறைவு. முன்னதாக துப்புரவுப் பணியாளராக இருந்த அவருக்குச் சென்ற ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேலை ஏதும் இல்லை.
பெண்களை ஏமாற்றியதன் தொடர்பில் தன் மீது சுமப்பத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளை டான் ஒப்புக்கொண்டார். அடுத்த மாதம் தீர்ப்பளிக்கும்போது மேலும் 13 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்படும்.

