சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ள துணை நகரங்கள் இரண்டை கிராஞ்சி விரைவுச்சாலையுடன் இணைக்கும் மாபெரும் திட்டம் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்பாக இரண்டு மேம்பாலங்கள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. அதனால் புக்கிட் பாஞ்சாங் குடியிருப்புவாசிகள் எளிதில் கிராஞ்சி விரைவுச்சாலையைப் பயன்படுத்த முடியும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விக்குப் பதிலளிக்கையில் நிலப் போக்குவரத்து ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது.
செஞ்சா ரோடு மற்றும் கிராஞ்சி விரைவுச்சாலையை இணைக்கும் மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளதாக ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக கிராஞ்சி விரைவுச்சாலை, உட்லண்ட்ஸை நோக்கிச் செல்லும் புதிய மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஜனவரியில் திறக்கப்பட்டது.
இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவுபெற்று திறக்கப்படும்போது செஞ்சா ரோடு மற்றும் புக்கிட் பாஞ்சாங் வட்டார வாகனமோட்டிகள் பயன்பெறுவர். அவர்களால் கிராஞ்சி விரைவுச்சாலைக்கு நேரடியாகச் செல்ல முடியும்.
அத்துடன், மேற்கில் தெங்கா என்ற புதிய துணை நகரம் உருவாகும். சுவா சூ காங், ஜூரோங், புக்கிட் பாத்தோக் ஆகிய நகரங்களால் சூழப்பட்ட புதிய நகரமாகும். அது 700 ஹெக்டர் பரப்பளவில் உள்ள பீஷானின் அளவாகும். வரும் 2025ஆம் ஆண்டுக்குப் பின் அந்நகரம் முழுமையான வளர்ச்சியை எட்டும்.
அப்போது அங்கு ஏறக்குறைய 42,000 வீடுகள் உருவாகும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

