'ஹீலிங் த டிவைட்' என்ற தடுப்பூசிக்கு எதிரான அமைப்பின் நிறுவனர் திருவாட்டி ஐரிஸ் கோ மீது நேற்று மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மேலும் மருத்துவர் ஒருவர் மற்றும் முன்னாள் உதவியாளர் ஒருவர் மீதும் கொவிட்-19 தடுப்பூசி குறித்த பொய்யான தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொது மருத்துவர் ஜிப்சன் குவா, 34, கேரி தோ கோங் சூங் ஆகியோருடன் இணைந்து கூட்டாக இந்தக் குற்றத்தை கடந்த அக்டோபர் மாதம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவரான ஜிப்சன், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத தனிப்பட்டவர்களுக்காக தடுப்பூசி ஆவணங்களில் போலியான தகவல்களை இடம்பெறச் செய்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
கொவிட்-19 தடுப்பூசி போடாத ஒருவருக்கு தடுப்பூசிச் சான்றிதழ் வாங்கித் தரும் முயற்சியில் ஈடுபட்ட இவர்கள் கேரி தோ என்பவர் சினோஃபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக பொய்யான தகவல் அளித்து தடுப்பூசிச் சான்றிதழ் பெற முயன்றனர்.
மருத்துவர் குவாவுடனும் அவருடைய உதவியாளர் தாமஸ் சுவா செங் சூன் என்பவருடனும் சேர்ந்து கோ என்பவர், சுகாதார அமைச்சுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக ஜனவரி 14ஆம் தேதி தவறான தகவலை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல் லிம் ஜுங்கி என்பவரும் இதே போன்ற குற்றத்தைப் புரிந்துள்ளார்.
கோ மீது ஏற்கெனவே கொவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவலை சுகாதார அமைச்சுக்கு அளித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தன.
நேற்று நடந்த நீதிமன்ற விசாரணையில் குவா மீது மொத்தம் 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதில் தொடர்புள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 43 வயது நியூட்டன் என்பவர் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
நியூட்டன், குமாரி பக்லர், திரு சோசன், குமாரி வோங்லங்கா அபின்யா, குமாரி நட்டாலியா கார்மெல்லா சேசன் ஆகியோருக்கு தடுப்பூசிச் சான்றிதழ் பெற்றுத்தரவே அவர்கள் இவ்வாறு பொய்யான தகவல்களை அளித்ததாகக் கூறப்படுகிறது.

