உயிருள்ள கோழிகளை சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கும் நோக்குடன் இந்தோனீசியாவின் பிந்தான் தீவில் மூன்று புதிய பண்ணைகளை அந்நாட்டின் வேளாண் உணவு நிறுவனம் ஒன்று அமைக்க இருக்கிறது.
இவ்வாண்டு இறுதிக்குள் சிங்கப்பூருக்குக் கோழிகளை கடல்வழியாக அனுப்பிவைக்க ஜப்ஃபா கொம்ஃபீட் இந்தோனீசியா (ஜேசிஐ) எனும் அந்த நிறுவனம் இலக்கு கொண்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்தோஜெயா அக்ரிநுசாவின் துணை நிறுவனமான ஜேசிஐ, பிந்தான் தீவில் கோழிக் குஞ்சு பொரிப்பகத்தை நடத்துகிறது. கோழிக் குஞ்சுகளை அது ரியாவ் தீவுகளுக்கு அனுப்பிவைக்கிறது. இந்நிலையில், பிந்தானிலிருந்து சிங்கப்பூருக்குக் கோழிகளை அனுப்பிவைக்கும் முதல் பண்ணை வரும் செப்டம்பர் மாதம் தயாராகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று பண்ணைகளும் வெவ்வேறு இடங்களில் திறக்கப்படும் என்றும் அவை ஒவ்வொன்றிலும் தலா 150,000 கோழிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூருக்குப் போதிய கோழிகளை அனுப்பிவைக்க வேண்டுமாயின் ஒவ்வொரு பண்ணையிலும் குறைந்தது 100,000 கோழிகள் இருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது.
உயிருள்ள கோழிகளை மலேசியாவிலிருந்து நிலம் வழியாக அனுப்ப ஏற்படும் செலவைக் காட்டிலும் அவற்றைக் கடல் வழி அனுப்ப ஏற்படும் செலவு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

