சிங்கப்பூரில் செயல்படும் சிறிய நிறுவனங்கள் தங்கள் கடனடைப்பு ஏற்பாட்டை மாற்றி அமைத்துக் கொள்ள அல்லது தொழிலை மூடிவிட உதவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு நடைமுறையில் பங்கெடுத்துக் கொள்வதற்கான விண்ணப்பக் காலம் 18 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
'எளிமையாக்கப்பட்ட நொடித்துப்போதல் செயல்திட்டம்' (SIP) என்று குறிப்பிடப்படும் அந்தச் செயல்திட்டத்திற்கு 2024 ஜனவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சட்ட அமைச்சு நேற்று அறிவித்தது.
அந்தச் செயல்திட்டத்திற்கான விண்ணப்ப காலம் இனிமேலும் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொவிட்-19 காரணமாக சிறிய நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டதை அடுத்து 2021 ஜனவரி மாதம் அந்தச் செயல்திட்டம் அறிமுகமானது.
விண்ணப்ப காலம் ஆறு மாதம் என்று தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்டது. பிறகு 2022ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி வரை அது 12 மாதம் நீட்டிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் செயல்படுகின்ற நிறுவனங்களில் ஏறக்குறைய 95% நிறுவனங்கள் சிறுகுறு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 கிருமியுடன் கூடிய வாழ்க்கை என்ற காலகட்டத்தை நோக்கி சிங்கப்பூர் முன்னேறுகிறது.
என்றாலும்கூட பல உலகப் பிரச்சினைகள், பொருளியல் நிலவரம் காரணமாக தொழில் நடத்துவதற்கான சூழ்நிலை தொடர்ந்து சவால் மிக்கதாகவே இருக்கிறது என்பதை சட்ட அமைச்சு சுட்டிக்காட்டியது. சிங்கப்பூரில் எல்லகைள் படிப்படையாக 2022 ஏப்ரல் 1ஆம் தேதி திறக்கப்பட்டன.
அதனை அடுத்து சிறிய நிறுவனங்கள் தலைதூக்கத் தொடங்கின. என்றாலும் மீட்சியைப் பொறுத்தவரை அவை இன்னமும் தொடக்கக் கட்டத்திலேயேதான் இருக்கின்றன.
இந்த நிலையில், பணவீக்கம் கூடுகிறது. வட்டி விகிதம் அதிகரிக்கிறது. பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பு பிரச்சினையை எதிர்நோக்குகிறது. இவற்றின் காரணமாக சிறுகுறு நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அமைச்சு தெரிவித்தது.
எளிமையாக்கப்பட்ட நொடித்துப்போதல் செயல்திட்டத்தில் தனித்தனியான இரண்டு செயல்திட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் உதவியைப் பெற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
தொழிலை தொடர்ந்து நடத்தக்கூடிய நிலையில் இருக்கும் நிறுவனங்கள், தங்கள் கடன் அடைப்பு ஏற்பாட்டை மாற்றி அமைத்துக்கொள்ள உதவும் எளிமையாக்கப்பட்ட கடனடைப்பு மாற்று ஏற்பாட்டுச் செயல்திட்டம் என்பது அவற்றில் ஒன்று.
தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத நிறுவனங்களுக்கு உதவக்கூடிய எளிமையாக்கப்பட்ட நொடித்துப் போதல் செயல்திட்டம் என்பது மற்றொன்று.
இந்தச் செயல்திட்டங்களுக்குத் தகுதிபெறக்கூடிய, பணப் பிரச்சினையில் சிக்கி இருக்கும் நிறுவனங்கள் 2024 ஜனவரி 28ஆம் தேதிவரை உதவி பெறலாம்.
நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட இதர நிறுவனங்களும் எளிமையான, விரைவான, செலவு குறைந்த கடனடைப்பு ஏற்பாடு மூலம் அல்லது நொடித்துப்போதல் நடைமுறை மூலம் பலன் அடையலாம்.
கடன் கொடுத்தவர்களுக்குக் கூடுமானவரை அதிக நன்மை கிடைக்கவும் வழிகள் உண்டு.

