'திருமணம் தொடர்பில் நிலைப்பாடு மாறாமல் சட்டப் பிரிவு 377ஏயைக் கையாள அரசாங்கம் ஆலோசித்து வருகிறது'

'திருமணம் தொடர்பில் நிலைப்பாடு மாறாமல் சட்டப் பிரிவு 377ஏயைக் கையாள அரசாங்கம் ஆலோசித்து வருகிறது'

2 mins read
1ed2b148-f0af-4f72-b7ba-907703509d9a
'ட்சூ சீ ஹியிமனிஸ்டிக்' இளையர் நிலையத்தில் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

திருமணம் தொடர்பில் சிங்கப்பூரின் நிலைப்பாடு மாறாமல் ஓரினக் காதலர்களுக்கிடையிலான பாலியல் உறவைக் குற்றமாக வகைப்படுத்தவேண்டாம் எனும் பலரது கோரிக்கையை எவ்வாறு கருத்தில்கொள்வது என்று அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

அந்த வகையில் குற்றவியல் சட்டப் பிரிவு 377ஏ தொடர்பில் பலருடன் ஆழமான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் நடத்தியிருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

சனிக்கிழமையன்று (30 ஜூலை) அமைச்சர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.

சட்டப் பிரிவு 377ஏக்குக்கீழ் ஓர் ஆடவர் பொது இடத்திலோ தனியாக இருக்கும்போதோ வேறொரு ஆணுடன் 'மிகவும் ஆபாசமான' செயலில் ஈடுபடுவது குற்றம். இதற்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

எனினும், இச்சட்டம் அதிகம் செயல்படுத்தப்படுவதில்லை.

கிறிஸ்துவ, இஸ்லாமிய, இந்து, தாவோ உள்ளிட்ட சமயங்களின் தலைவர்கள், அடித்தளத் தலைவர்கள், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள், 'எல்ஜிபிடி' எனப்படும் ஓரினக் காதலர்கள் போன்றோருடன் இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாக திரு சண்முகம் குறிப்பிட்டார்.

"சக ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்பவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கக்கூடாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. ஓரினக் காதலர்களுக்கிடையிலான பாலியல் உறவைக் குற்றமாக்கக்கூடாது," என்று அவர் கூறினார்.

"அதே வேளையில் வேறு சில மாற்றங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள இதைக் குற்றம் இல்லை என்று வகைப்படுத்துவதையும் பெரும்பாலோர் விரும்பவில்லை. குறிப்பாக, திருமணத்தின் தொடர்பில் நமது தற்போதைய நிலைப்பாட்டைத் தொடர்வதே பெரும்பாலோரின் விருப்பம்.," என்றும் அவர் சுட்டினார்.

ஆணும் பெண்ணும் மணமுடிப்பதையே தற்போது நடப்பில் உள்ள சட்டம் திருமணமாக ஏற்றுக்கொள்கிறது.

இது மாறுவதை மக்கள் விரும்பவில்லை என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.

அந்த வகையில் திருமணத்தைப் பொருத்தவரை மக்கள் தற்போதைய சட்டங்களில் மாற்றங்களை வரவேற்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

"இந்தக் கருத்து அரசாங்கத்திற்குப் புரிகிறது. இந்த விவகாரத்தை எவ்வாறு சமமாகக் கையாள்வது என்பதை அரசாங்கம் ஆராய்கிறது," என்று திரு சண்முகம் கூறினார்.