அரசாங்கத்தின் கடப்பாடு பற்றி பிரதமர் லீ சியன் லூங் விளக்கம்
மக்கள் செயல் கட்சி தொகுதியில் அல்லது அல்லது எதிர்த்தரப்புத் தொகுதியில் மக்கள் எங்கு வசித்தாலும் அவர்களுக்குச் சேவையாற்ற அரசாங்கம் கடப்பாடு கொண்டிருக்கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
புதிய ரிவர்வேல் சமூக மன்றத்தை நேற்று திறந்து வைத்து திரு லீ உரையாற்றினார்.
பழைய ரிவர்வேல் சமூக மன்றம் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வெற்றுத்தளத்தில் அமைந்து இருந்தது.
அந்த வட்டார மக்கள்தொகைக்கு ஏற்ற அளவுக்கு அது பெரியதாக இல்லை.
பல்வேறு வசதிகளுடன் புதிய சமூக மன்றத்தை அமைப்பதற்கான திட்டங்கள் 2016ல் அறிவிக்கப்பட்டன. அவை பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகளுடன் செயல்படுத்தப்பட்டன.
அப்போது செங்காங் ஈஸ்ட் மசெக நிர்வாகத்தின்கீழ் இருந்தது. பிறகு 2020 பொதுத் தேர்தலில் செங்காங் குழுத்தொகுதியை எதிர்த்தரப்பு பிடித்தபோது அது அதன் வசமாகிவிட்டது.
இருந்தாலும் செங்காங்கில் வசிக்கும் மக்களுக்குச் சேவையாற்றுவது என்று அரசாங்கம் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருக்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.
இதன் காரணமாகவே, அதிக மக்களின் பலதரப்பட்ட தேவைகளை நிறைவேற்றும் வகையில் புதிய சமூக மன்றத்தை அமைப் பதற்கான பணிகள் தொடர்ந்தன.
அந்தச் சமூக மன்றம் அமைந்திருக்கும் பகுதி பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதியின் ஓர் அங்கமாக இருந்தது. பிறகு அது செங்காங் குழுத்தொகுதியில் சேர்க்கப்பட்டது.
செங்காங் ஈஸ்ட் மசெக தொகுதியாகவோ அல்லது எதிர்த் தரப்புத் தொகுதியாகவோ இருந்தாலும் பல சேவையாளர்களும் தொண்டூழியர்களும் சமூக மன்ற நிர்வாகக் குழுவிலும் அதன் துணை குழுக்களிலும் தொடர்ந்து இடம்பெற்று மக்களுக்காகப் பல்வேறு செயல்திட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்து உதவுகிறார்கள் என்றார் திரு லீ.
புதிதாக திறக்கப்பட்ட ரிவர்வேல் சமூக மன்றம் ரிவர்வேல் பிளாசாவுக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.
சிங்கப்பூரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த அதிகமான பொருள்களைக் கொண்டு அந்தப் புதிய மன்றம் கட்டப்பட்டு இருக்கிறது.
அதில் இளையர்கள், வேலை பார்ப்பவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலருக்கும் பல்வேறு வசதிகள் இருக்கின்றன; குழந்தைப் பராமரிப்பு நிலையமும் உள்ளது.
பல்நோக்கு அரங்கும் நடன அரங்குகளும் வகுப்பறைகளும் இருக்கின்றன.
சமூக மன்றங்கள் இன்றும் தொடர்ந்து பொருத்தமான அமைப்புகளாக இருக்கின்றன என்று திரு லீ தெரிவித்தார்.
மக்கள் கம்போங்கில் இருந்து இடம்பெயர்ந்து நவீன அடுக்குமாடி வீட்டுக்கு மாறி இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் காலத்தில் இருந்ததுபோல் சமூக நிலைய தொலைக்காட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை.
என்றாலும்கூட சமூக நிலையங்கள் தொடர்ந்து மிக முக்கியப் பங்காற்றுகின்றன என்று திரு லீ குறிப்பிட்டார்.

