புதிய கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) மனு செய்யும் சிங்கப்பூரர்கள் வரும் டிசம்பரில் இருந்து ஒரு வாரம் காத்திருந்தால் போதும், கடவுச்சீட்டு கிடைத்துவிடும்.
கொவிட்-19 தொற்றுக்கு முன்பும் இதேபோன்று ஒரே வாரத்தில் அவர்கள் கடவுச்சீட்டைப் பெற முடிந்தது.
அதேபோன்ற நிலைமை இந்த ஆண்டு முடிவில் திரும்பிவிடும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
இந்த ஆணையம் ஒவ்வொரு நாளும் பெறும் கடவுச்சீட்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் அதிகமானதை அடுத்து அதைச் சமாளிக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் நடப்புக்கு வந்தன.
அதன் பிறகு எத்தனை மனுக்களைப் பரிசீலிக்க முடியும் என்பதைக் கணக்கிட்டும் அந்த ஆணையம் டிசம்பர் மாத இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஆணையத்தின் குடிமக்கள் சேவை நிலையத்தின் இயக்குநர் மூத்த உதவி ஆணையர் டோமினிக் சுவா நேற்று இந்த விவரங் களைத் தெரிவித்தார்.
புதிய கடவுச்சீட்டைப் பெற இப்போது குறைந்தபட்சம் ஆறு வார காலம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
கொவிட்-19க்கு முன்பு கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,000ஆக இருந்தது. ஏப்ரல் 1ஆம் தேதி எல்லைகள் திறக்கப்பட்டதற்குப் பிறகு அது மே மாதம் நாள் ஒன்றுக்கு 7,000க்கும் அதிகமாகியது.
இந்த மாதம் ஆணையம் அன்றாடம் ஏறத்தாழ 4,500 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

