சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா இவ்வாண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு இவ்வாண்டு பாத ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்து அறக்கட்டளை வாரியமும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலும் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
2020ஆம் ஆண்டு ஒரு மாத கால விழாவாக நடைபெற்ற தீமிதித் திருவிழா கடந்த ஆண்டு வழக்கமான மூன்று மாத விழாவாக அனுசரிக்கப்பட்டது.
இவ்வாண்டும் வழக்கம்போல மூன்று மாதத் திருவிழாவாக அனுசரிக்கப்படவிருக்கும் இவ்விழாவின் முதல் நிகழ்ச்சியாக தீமிதித் திருவிழாவுக்கான கொடியேற்றம் நாளை ஆகஸ்ட் 1ஆம் தேதி இடம்பெறும்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கும் இடையிலான பக்தர்களின் பாத ஊர்வலம் இம்முறை நடைபெறும். ஆனால் அதில் பங்கேற்போரின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்படும்.
இது குறித்து கருத்துரைத்த ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் திரு சி. லட்சுமணன், "இரவு 9 மணிக்குள் தீமிதிக்கப் பதிவு செய்துகொண்டோர் அன்றைய தினம் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தங்கள் பதிவை உறுதிசெய்துகொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கு கைப்பட்டையும் காப்பும் அணிவிக்கப்படும். பின்னர் அவர்கள் பெருமாள் கோயிலிலிருந்து மாரியம்மன் கோயிலை நோக்கி தங்கள் பாத ஊர்வலத்தைத் தொடங்கலாம்.
"இரவு 9 மணிக்கு மேல் தீமிதிக்கப் பதிவு செய்துகொண்டோர் அன்றைய தினம் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு வெளியே தங்கள் பதிவை உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கு கைப்பட்டையும் காப்பும் அணிவிக்கப்படும். பின்னர் அவர்கள் வரிசையில் நின்று மாரியம்மன் கோயிலுக்குள் சென்று தீமிதிக்கலாம்," என்றார்.
"தற்போது கொவிட்-19 தொற்று எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பதால் இந்தப் பாதுகாப்பு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் வரிசை பிடித்து நிற்பதைத் தடுக்கும் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. ஆகவே, பக்தர்கள் செப்டம்பர் 16ஆம் தேதி முன்பதிவு தொடங்கும்போது முன்கூட்டியே பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்றும் திரு லட்சுமணன் விளக்கினார்.
பக்தர்கள் பால்குடம் செலுத்துதல், குடும்பிடுதண்டம், அங்கப்பிரதட்சணம், தீக்குழியைச் சுற்றிவருதல் போன்ற எல்லா நேர்த்திக்கடன்களுக்கும் முன்பதிவு அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது.
அனைத்து நடவடிக்கைகளின் போதும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். விழாவில் கலந்துகொள்வோர் அனைவரும் முழுமையாகக் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். அவர்கள் எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும் என்றும் இந்து அறக்கட்டளை வாரியம் அறிவுறுத்தியது.
தீமிதித் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் heb.org.sg எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையப்பக்கத்தில் கட்டாயம் பதிவு செய்வதுகொள்ளவேண்டும். முன்பதிவு 16 செப்டம்பர் 2022ல் தொடங்கும்.
பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே தீமிதித் திருவிழா தொடர்பான நிகழ்ச்சிகளை இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையப்பக்கத்திலும் யூடியூப் பக்கத்திலும் நேரலையில் காணலாம்.

