என்னுடைய பழைய பள்ளித் தோழியை ஒரு மாதம் முன்பு மதிய உணவு நேரத்தில் சந்தித்தேன். வேலை எல்லாம் எப்படிப் போகிறது, உன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் எல்லாரும் எப்படி? என்று தோழியிடம் கேட்டேன்.
ஒரு பெருமூச்சுவிட்ட என் தோழி, சிலர் வெளிப்படுத்தும் கருத்துகள் தனக்குச் சங்கடம் தருவதாகக் கூறினார். அது பற்றி துருவித்துருவி கேட்டபோது, சக ஊழியர்களில் ஒரு சிலர் ஒருவர் மற்றொருவருக்கு இடையில் சிங்கப்பூரில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவர்கள் பற்றி நகைச்சுவையாகப் பேசிச் சிரித்துக்கொள்வார்கள் என்று அந்தத் தோழி கூறியதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.
தோழி வேலை பார்க்கும் அலுவலகத்தில் மேசைகள் நெருக்கமாக இருக்கும் என்பதால் அங்கு ஊழியர்கள் தங்களுக்குள் அரட்டை அடித்துக்கொள்வது என் தோழி காதில் விழும்.
அவர் ஓர் இந்தியர். அவருக்கு வயது 20களில் இருக்கும். தன்னைவிட மூத்த ஊழியர்கள் தங்களுக்கு இடையில் இதர இனங்களைப் பற்றி கேலி பேசி கிண்டலடித்துக்கொள்வதை தடுக்கவோ மறுக்கவோ அவரால் முடியாது. வேலை போய்விடலாம் என்ற பயத்தில் அது பற்றி பேசவும் என் தோழி தயங்குவார்.
உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் என்னுடைய தோழி இருப்பதைப் பார்க்கும் எனக்கு மனம் சங்கடமாகிவிட்டது.
சக ஊழியர்களின் இரக்கமில்லாத வார்த்தைகளைச் செவிமடுக்கும்போது என் தோழி அதை ஒரு மனக்காயமாக உணர்கிறார். ஆனால் அவருடைய செய்கைகளை எல்லாம் பார்க்கும்போது அத்தகைய ஏச்சுபேச்சுகளை எல்லாம் வழக்கமான ஒன்றாக அவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவே தெரிகிறது.
சிங்கப்பூர் சென்ற வியாழக்கிழமை இன நல்லிணக்க நாளைக் கொண்டாடியது.
பல்வேறு இன, கலாசார மக்கள் ஒன்றிணைந்து அதைக் கொண்டாடியதைப் பார்க்கும்போது அது பொருள் பொதிந்த ஒன்றாகவே தெரிந்தது.
அதேவேளையில், இயல்பு நிலையிலான இனவாதம் போன்ற பிரச்சினைகள் நம் சமூகத்தைப் பீடித்துள்ள நோய்களாகவே தொடர்கின்றன. சிறுபான்மை இனத்தவர்கள் அன்றாடம் எதிர்நோக்குவது இதுதான் என்றால், இதைத் தடுக்க என்ன செய்தாக வேண்டும்?
பிரதமர் லீ சியன் லூங், சென்ற ஆகஸ்ட்டில் தேசிய தினப் பேரணி உரை யில் மூன்றில் ஒரு பகுதியாக, இனம், சமயம் தலைப்புகள் பற்றி பேசினார். தொற்று காலத்தின்போது இன உறவுகள் நெருக்கடிக்கு உட்பட்டதாக அவர் தெரிவித்தார். மனப்போக்கு மாற்றமே இனவாதத்திற்கு உண்மையான தீர்வு என்பதை அவர் ஒப்புக்கொண்டார். சரியான திசையில் மக்களைத் திருப்பிவிடுவதில் சட்டம் பங்காற்ற முடியும் என்றார் அவர்.
'இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம்' என்ற ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பிறகு அவர் அறிவித்தார்.
இப்போது நடப்பில் இருக்கும் 'சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம்' 1992ல் நடப்புக்கு வந்தது. ஒரு முறைகூட அது பயன்படுத்தப்பட்டதில்லை.
இருந்தாலும் சகிப்புத்தன்மையையும் சமய நல்லிணக்கத்தையும் மேம்படுத்த அது உதவி இருக்கிறது. அதுபோலவே புதிய சட்டமும் உதவும் என்றார் பிரதமர்.
நல்லிணக்கத்தை மேம்படுத்தக்கூடிய தேசிய கொள்கைகள் இருக்கின்றன. கடந்த ஆண்டில் இனப் பிரச்சினைகளில் அதிக ஒருமித்த கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது. இருந்தாலும்கூட இயல்பு நிலையிலான இனவாதம் நீடித்த ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
மலாய்க்காரரான என்னுடைய மற்றொரு தோழி, டிக்டாக் காணொளியில் இனவாதக் கருத்து ஒன்றைத் தான் பார்த்ததாகவும் அது தனக்கு வியப்பளிக்கவில்லை என்றும் ஆனால் தான் ஏமாற்றம் அடைந்துவிட்டதாகவும் என்னிடம் கூறினார்.
அந்தக் காணொளியைத் தேடிப் பார்த்தேன். டிக்டாக்கில் தெரிவிக்கப்பட்டு இருந்த கருத்துக்கு 100க்கும் மேற்பட்ட ஆதரவுகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால் நான்கே நான்கு டிக்டாக் பயனர்கள் மட்டுமே அந்த இனவாதக் கருத்தைக் கண்டித்து இருந்தார்கள்.
இரு எண்ணங்கள் என் மனத்தில் ஓடின. மனதைப் பாதிக்கக்கூடிய இனவாத கருத்துகளைத் தெரிவிப்பது மக்களுக்கு எந்த அளவுக்கு எளிதாக இருக்கிறது என்பது அவற்றில் ஒன்று.
டிக்டாக்கில் கருத்து தெரிவித்தவரை சரிப்படுத்த முயன்றவர்களின் எண்ணிக்கையும் அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களின் எண்ணிக்கையும் 4:100 என்று இருக்கிறது. இது என் மனத்தில் ஓடிய இரண்டாவது சிந்தனை.
டிக்டாக்கில் அந்தக் கருத்தைப் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் அதை ஒப்புக்கொள்கிறார்களா? அல்லது வெளியே கருத்து எதையும் தெரியப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்ற எண்ணத்துடன் மௌனமாக பெரும்பாலானவர்கள் இருக்கிறார்களா? என்ற இரண்டு கேள்விகள் என் மனத்தில் எழுந்தன.
முன்பு நானும் இந்த இரண்டாவது பிரிவினரில் ஒருவராகவே இருந்தேன். ஆனால் அப்படி நான் இருந்திருக்கக் கூடாது.
சீனரான நான், சிங்கப்பூரில் பெரும்பான்மை இனச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில், அனுகூலமான ஒரு நிலையில் இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
பாரபட்சமாக நடத்தப்படும்போது மனம் என்ன பாடுபடும் என்பதை ஒருபோதும் புரிந்துகொள்ளாத ஒரு நிலையில் நான் இருப்பேன் எனலாம்.
ஆனால் இயல்பான இனவாத ஏச்சுபேச்சுகளுக்கு ஆளாகக்கூடிய சிறுபான்மையினரிடம் நான் கருணையுடன் நடந்துகொள்ள இயலாது என்பது அதற்கான பொருளல்ல.
இனவாதக் கருத்துகள் தங்களை நோக்கிக் கூறப்படும்போது அவற்றால் தாங்கள் பாதிக்கப்படுவதாக என்னிடம் கூறும் சிறுபான்மை இனத்தவர்களான என் நண்பர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்.
அதேவேளையில், அத்தகைய கருத்துகள் கூறப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலைக்கு சிலர் வந்துவிட்டார்கள் என்பதை நினைக்கும்போதுதான் என் மனம் மேலும் வேதனை அடைகிறது.
வெளிப்படையாகப் பேசவேண்டியதுதான் இதில் நாம் செய்யக்கூடிய ஒன்று என்று நான் நம்புகிறேன்.
நீங்கள் சிலருடன் சேர்ந்து குழுவாக இருக்கையில், உங்களுடன் இருப்போரில் சிறுபான்மை இனத்தவர் ஒருவர்கூட இல்லை என்றாலும், யாரோ ஒருவர் ஏதோ ஓர் இனவாதக் கருத்தை வெளிப்படுத்தினால் அது தவறு என்று கூறுங்கள். உங்களிடம் ரகசியமாக இனவாத நகைச்சுவை ஒன்றை யாராவது கூறினால் அதை மறுத்து, கூறியவருக்குப் புத்திமதி சொல்லுங்கள்.

