சிங்கப்பூரில் தாய்ப்பால் ஊட்டு
வதில் தாய்மார்களுக்குப் பேருதவியாக இருந்து வருகிறார்கள் சில பெண்கள். இன்று (ஆகஸ்ட் 1) தொடங்கும் உலக தாய்ப்பாலூட்டும் வாரத்தை முன்னிட்டு அந்தப் பெண்களின் உன்னதப் பணிகள் வெளியிடப்பட்டுள்ளன.
220 லிட்டர் தாய்ப்பால் தானம்
அவர்களில் ஒருவரான பெர்லி குவேக், 41, என்பவர் கேகே மருத்துவமனை தாய்ப்பால் வங்கியின் ஆகப்பெரிய கொடையாளர் என்னும் பெருமைக்குரியவர். அரசாங்க ஊழியரான இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இவ்வாண்டு ஜூலை வரை கிட்டத்தட்ட 220 லிட்டர் தாய்ப்பாலை இந்த வங்கிக்குத் தானமாக வழங்கி உள்ளார்.
"எனக்கு அதிகமான தாய்ப்பால் சுரப்பது கடவுள் தந்த வரம். இதனை, குழந்தைக்கு ஊட்ட தாய்ப் பால் தேடும் தாய்மார்களுக்கு ஏன் தானமாக வழங்கக்கூடாது," என்று கேட்கிறார் திருமதி குவேக்.
கேகே மருத்துவமனை தாய்ப்பால் வங்கியை பலமுறை கடந்து சென்றபோதும் தமக்கு முதல் குழந்தை பிறந்து அதற்கு சில உடல்நலப் பிரச்சினைகள் எழுந்தபோதுதான் தாய்ப்பாலின் அருமையை தாம் அறிந்ததாக இவர் கூறுகிறார். தாய்ப்பால் கொடையாளர் என்ற வகையில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனைக்குச் செல்வதோடு கொடை தொடர்பான பல கேள்விகளுக்கும் இவர் பதிலளிக்க வேண்டும்.
கடந்த மார்ச் மாதம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட திருமதி குவேக், இரு வாரங்களுக்கு தாய்ப்பால் தானத்தை நிறுத்தினார்.
மாதம் 22 முதல் 25 லிட்டர் வரை தாய்ப்பால் வழங்கி வந்த இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்து அதற்கு ஒரு வயது ஆனதும் இவரிடம் தாய்ப்பால் வாங்குவதை வங்கி நிறுத்திவிட்டது. வளர்ந்த பிள்ளைகளின் தாயிடம் இருந்து வாங்கப்படும் தாய்ப்
பாலின் தன்மையில் மாற்றம் இருக்கும் என்பதால் வங்கி அதற்கான சில கோட்பாடுகளை வைத்துள்ளது.
'த இண்டக்ரேட்டிவ் மெடிக்கல் சென்டர்' என்னும் மருத்துவ
நிலைய மருத்துவரான மைதிலி பாண்டி, 41, தாய்ப்பால் ஊட்டு
வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குவோருக்கு உதவி வருகிறார்.
'தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் ஆதரவுக் குழு' என்னும் உள்ளூர் அறநிறுவனத்தில் இணைந்த இவர், குழுவின் தொண்டூழிய ஆலோசகர்களுக்கு முன்னோடி பயிற்றுநராக இருந்து வருகிறார்.
"தாய்மார்களின் பாலூட்டும் பயணத்தில் உதவ பலவித ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி உள்ளது. சிலர் தாய்ப்பாலை மட்டுமே தங்களது குழந்தைக்கு ஊட்டுவர்.
"வேறு சிலர் தாய்ப்பாலையும் புட்டிப்பாலையும் ஊட்டுவர். இவ்வளவுதான் என்னால் முடியும் என்று பின்வாங்கும் தாய்மார்களுக்குப் பக்கபலமாக இருந்து உதவுவது எனது விருப்பம்," என்கிறார்
திருமதி மைதிலி.
கொள்ளைநோய்க் காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய நிலையில் தாய்மார்
களிடம் குழந்தைக்குப் பாலூட்டும் போக்கு அதிகமாக இருந்ததைக் கண்டு மனம் நெகிழ்ந்தாக இவர் கூறுகிறார்.
"பிறந்ததுமே புட்டிப்பாலை கொடுத்துவிடுவதால் சில குழந்தைகள் தாய்ப்பாலை மறுக்கும். அதுபோன்ற சமயங்களில் குழந்தைகளை மார்போடு அணைத்துக்கொள்ள தாய்மார்களுக்குச் சொல்லித் தருவேன். அது ஒரு மந்திரம்போல வேலை செய்யும்.
"முதலில் மறுத்த குழந்தை இப்போது தாய்ப்பாலைத் தேடுவதை அறிந்து மகிழும் தாய்மார்கள் அதனை ஊட்டி ஆனந்தக் கண்ணீர் விடுவர். அதனைப் பார்த்து நான் ஆனந்தம் அடைவேன். இப்படி நடக்கும் ஒவ்வொரு முறையும் எதையோ சாதித்ததாக உணர்வேன்," என்று விளக்கினார் திருவாட்டி மைதிலி.
பாலூட்டும் பெண்களுக்கான சிறப்பு மார்க்கச்சை
இவரை அடுத்து, பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் ஃப்ளோரென்ஸ் டே, 38, என்பவரின் பணி முக்கியமானது. ஆசிய தாய்மார்களுக்காகவே பாலூட்டும் வசதியுடன் கூடிய மார்க்கச்சையை வடி
வமைக்கிறார் இவர். ஆசியப் பெண்களின் உடலமைப்புக்கும் வட்டார வெப்பநிலைக்கும் ஏற்ற மார்க்கச்சையை வடிவமைப்பது இவரது திறன். தாம் முதல் குழந்தையைப் பெற்றபோது பாலூட்ட ஏதுவான மார்க்கச்சையைத் தேடி அலைந்ததாகக் கூறும் இவர், முடிவில் தமக்குத் தாமே அதனை வடிவமைக்கத் தொடங்கினார்.
இன்று இவரால் பல தாய்மார்கள் பலனடைகிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், புருணை போன்ற நாடுகளில் இவரது மார்க்கச்சை வியாபாரம் ஆகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்த வர்த்தகம் ஆண்டுக்கு 30% வளர்ச்சி பெற்று வருகிறது.

