அருணா கந்தசாமி
மாதர் சுகாதாரம், இயற்கைப் பாதுகாப்பு ஆகியவற்றை மருத்துவரான நிஷா தயானந்தன், 29, தன் இரு கண்களாகக் கருதுகிறார். 2020ஆம் ஆண்டில் 'மிஸ் எர்த் மலேசியா' பட்டத்தை வென்ற இவர், நெகிழிக் கழிவற்ற மாதவிடாய்க்கால அணையாடைகளை (sanitary napkins) உருவாக்கியதுடன் அதை மேடையில் 'இகோபேட்' (ecopad) என்ற பெயரில் உலகிற்கு அறிமுகமும் செய்து வைத்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணராகப் பணிபுரியும் நிஷா, பள்ளிப் பருவத்திலிருந்தே அழகு ராணிப் போட்டிகளில் அதிக நாட்டமுடையவர். சிரம்பானில் பிறந்த இவருக்குப் போட்டிகளும் புதிதல்ல, கிரீடங்களும் புதிதல்ல. 2019ஆம் ஆண்டு 'மிஸ் வேர்ல்ட் மலேசியா' போட்டியில் சிறப்பு விருது வென்றார்.
'மருத்துவராக பாதுகாப்பதே என் கடமை'
"இயற்கையை அதிகம் நேசிப்பவள் நான். ஆனால் நெகிழியின் ஆதிக்கத்தால் அண்மைய காலமாக மாசுபாடு மோசமாகியுள்ளது. பெண்கள் பொதுவாகப் பயன்படுத்தும் அணையாடையில் 90% நெகிழியும் 10% செயற்கை வாசனை திரவியங்கள், டையாக்ஸின் போன்ற புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்களும் இருக்கின்றன. ஒரு மருத்துவராக மற்றவர் நலனைப் பாதுகாப்பது என் கடமை. அதனால்தான் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க நான் நெகிழிக் கழிவில்லா அணையாடைகளைக் கண்டுபிடித்தேன்," என்று விளக்கினார்.
சாதாரண மாதவிடாய்க்கால அணையாடைகள் மண்ணில் முழுமையாகச் சிதைவதற்கு 800 முதல் 1000 ஆண்டுகளாகும். ஆனால் கரிமப் பஞ்சு, மரக்கூழால் உருவாக்கப்பட்டுள்ள 'இகோபேட்', 216 மணி நேரத்திலேயே சிதைந்து இயற்கைப் பொருள்களாக மாறிவிடும்.
விழிப்புணர்வு வேண்டும், சமூகத்திற்குப் பங்காற்ற வேண்டும்
ஒவ்வொரு பொட்டலத்திலும் அணையாடைகளுடன் தகவல் ஏடுகளும் இருக்கும். கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டறியும் தகவல்கள், உதவிக்கு அணுகக்கூடிய அவசரத் தொடர்பு எண்கள் போன்ற விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.
பொட்டலத்தின் மீதுள்ள சாயம் முதல் ஒட்டு பசை வரை அனைத்தும் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் உணவு அடிப்படையிலான பொருள்களால் (food based) உருவாக்கப்பட்டவை.
முழுநேர வேலை, அழகிப் போட்டிகள், பட்டப்படிப்பு இவற்றுடன் இந்த அர்த்தமுள்ள தொழிலைத் தன் இரட்டை சகோதரருடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார் நிஷா. சமூகத்திற்குத் தன் பங்கை ஆற்றவேண்டும் எனும் ஆர்வத்தால், குறைந்த விலையில் தன் மாதவிடாய்க்கால அணையாடைகளை இரண்டு ஆண்டுகளாக மலேசியாவில் விற்பனை செய்து வருகிறார். விற்பனையாகும் ஒவ்வொரு பொட்டலத்திற்கும் வசதிகுறைந்த மக்களுக்கு ஒரு வெள்ளி நன்கொடையாகப் போய்ச் சேரும்.
வருத்தும் பிரச்சினைக்குத்
தீர்வு காண முடிவு
2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் கோத்தா சமரகானில் உள்ள மலேசியாவின் சரவாக் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில்வதற்காக சென்ற நிஷா, அந்த மாநிலத்திலிருந்த பழங்குடி மக்களிடையே சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் சென்றிருந்தார். அங்கு தான் கண்ட காட்சிகள், தன்னை மிகவும் பாதித்ததாகக் கூறுகிறார் நிஷா.
"மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கத் தவறினால் நோய்த்தொற்று, புற்றுநோய் என உயிருக்கே ஆபத்து நேரலாம். அங்கிருந்த பெண்கள் அழுக்குத் துணி, தேங்காய் நார் போன்றவற்றைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். இவர்களைப் போல் மலேசியாவில் எத்தனையோ வசதிகுறைந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று அன்று நான் முடிவெடுத்தேன். கடுமையான ஆராய்ச்சிக்குப் பின்னர் 2020ல் என் அணையாடைகளை அறிமுகப்படுத்தினேன்," என்கிறார் இவர்.
பல்வேறு ஆதரவுத் திட்டங்களில் ஈடுபாடு
மக்களுக்குச் சேவையாற்றும் நோக்கில் 'கம்யூனிட்டி ஆஃப் ஹெல்த்' என்ற உதவிக் குழுவையும் இவர் நிர்வகித்து வருகிறார். கொவிட்-19 நெருக்கடி காலத்தின்போது வசதிகுறைந்த மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள், குறிப்பாக தமது அணையாடைகளை நன்கொடையாக வழங்குவது, பள்ளிகளில் டெங்கி காய்ச்சலைப் பற்றிய விழிப்புணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்வது போன்ற பல வழிகளில் ஆதரவுக்கரம் நீட்டினார். மலேசியாவில் மட்டுமல்லாமல் இந்தோனீசியா, தென் ஆப்பிரிக்கா என்று கண்டங்கள் தாண்டியும் இவரது சமூகச் சேவை தொடர்கிறது.
மலேசியாவைச் சேர்ந்த 'பெக்கா' என்ற அரசு சார்பற்ற அமைப்புடன் இணைந்து இயற்கையைப் பாதுகாப்பதற்கு 20,000க்கு மேற்பட்ட மரங்கள் நடுவதற்கு உதவி உள்ளார்.
அவருடைய பங்களிப்புக்கு அமெரிக்க மருந்தக வரலாற்று ஆய்வுக் கழகம் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
ஒருவரது வெற்றிக்குக் குடும்பப் பின்னணி முக்கியமல்ல
இளம் வயதிலேயே இத்தனை லட்சியங்களையும் சாதனைகளையும் நிகழ்த்தியுள்ள நிஷா, தன் அம்மாதான் தனக்கு முன்மாதிரி என்கிறார். இல்லத்தரசியாக, நான்கு பிள்ளைகளையும் வளர்த்ததுடன் அண்மையில் கோலாலம்பூரில் முதியோர் இல்லம் மற்றும் விலங்குகளுக்கான காப்பகம் ஒன்றையும் தன் அம்மா நிர்வகிப்பதாக நிஷா பகிர்ந்துகொண்டார். முதுமைக் காலத்திலும் மற்றவர்களைப் பராமரிக்கவேண்டும் என்று தன் அம்மாவிடம் காணப்படும் முனைப்பு, தனக்கு ஊக்குவிப்பாக இருந்ததென நிஷா குறிப்பிட்டார்.
"நான் ஓர் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவள். என் அப்பா ஒரு டாக்சி ஓட்டுநர். அம்மா இல்லத்தரசி. எந்தக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தாலும், நம் குறிக்கோளை நோக்கிக் கடிவாளமிட்ட குதிரையைப் போல ஓடினால் வெற்றி நிச்சயம்," என இளையர்களுக்கு நிஷா அறிவுறுத்த விரும்புகிறார். இவருடைய அணையாடைகளை இன்னும் ஓராண்டில் மற்ற நாடுகளிலும் விற்பனை செய்யும் தன் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் இவர் கூறுகிறார். சிங்கப்பூரில் இவரது அணையாடைகளை விற்பனை செய்வதற்கு லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கத்துடன் இணைந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறுகிறார் இந்த இளநங்கை.

