மருத்துவமனைகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் நடப்பில் இருக்கும் முடுக்கிவிடப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
நோயாளிகளைச் சந்திக்க வருவோருக்கான அந்தக் கட்டுப்பாடுகள் புதன்கிழமை (3 ஆகஸ்ட்) வரை நடப்பில் இருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முடுக்கிவிடப்பட்ட கட்டுப்பாடுகளின்கீழ் ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த காலத்திலும் அவரைக் குறிப்பிட்ட இருவர் மட்டுமே நேரில் சென்று சந்திக்கலாம்.
சந்திக்க விரும்புவோரின் விவரங்கள் முன்னதாக சமர்ப்பிக்கப்படவேண்டும்.
ஒரு நேரத்தில் நோயாளிக்கு அருகே ஒருவர் மட்டுமே இருக்கமுடியும்.
மோசமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை அதிகபட்சம் ஐவர் பார்க்கமுடியும்.
அத்தகைய நோயாளிக்கு அருகே ஒரு நேரத்தில் இருவர் மட்டுமே இருக்கலாம்.
அரை மணிநேரத்திற்கு மேல் நோயாளியைச் சந்திக்க அனுமதி கிடையாது.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் மருத்துவமனைகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் அதிக எண்ணிக்கையில் நோயாளிகளைக் கையாளும் சூழல் தொடர்கிறது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானோர், இதர நோயாளிகள் என இரு வகை நோயாளிகளையும் மருத்துவமனைகளும் பராமரிப்பு இல்லங்களும் கவனிக்கின்றன.
அதனால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

