அப்பர் பாய லேபார் தரைவீடு ஒன்றில் நிகழ்ந்த எரிவாயு வெடிப்பில் இல்லப்பணிப்பெண் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் கால்களில் ஏற்பட்ட காயங்களுக்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பிவிட்டார் என்று அறியப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று(ஆகஸ்ட் 1) நடந்துள்ளது.
காலை 11.30 மணியளவில் வீட்டில் பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் தமது வீட்டின் சமையலறையிலிருந்து பணிப்பெண் வெளியே ஓடிவந்ததாகவும் அவரது முதலாளி திரு லிம்,60, கூறினார்.
‘எனது பணிப்பெண் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்தார். எரிவாயு சிலிண்டர் இருந்த கேபினட்டின் கதவு தூள் தூளாகப் போய் தரையில் இருந்தது,’’ என்றார் திரு லிம்.
மியன்மாரிலிருந்து வந்த அந்தப் பணிப்பெண் திரு லிம்மின் வீட்டில் எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார்.
டான் புரோஸ் எரிவாயு நிறுவன ஊழியர் ஒருவர் சம்பவத்திற்குப் பிறகு வீட்டில் சோதனை மேற்கொண்டார்.
எரிவாயுவில் பொருத்தப்பட்ட குழாய் சேதம் அடைந்திருந்தது என்றும் பெருச்சாளிகள் குழாயை மென்று ஒரு துவாரத்தை ஏற்படுத்தியதால் எரிவாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அந்த ஊழியர் கூறியதாகத் திரு லிம் சொன்னார்.