கச்சிதமான இடத்தில் ஆண்டுதோறும் 33 டன் பச்சை பசேலான காய்கறிகளை சாகுபடி செய்ய முடிகிற புதிய நகர்ப்புற பண்ணை ஒன்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
'குரோகிரேஸ்' என்று அழைக்கப்படும் இந்தப் பண்ணை 650 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது, ஒன்றரை கூடைப்பந்து அரங்கின் அளவுக்குச் சமம். இந்தப் பண்ணையின் நான்கு மாடிகளில் காய்கறிகள் பயிர் செய்யப்படுகின்றன.
வழக்கமான உட்புற பண்ணைகளைவிட இது நான்கு மடங்கு அதிக உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளது. ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் 70 கிலோகிராம் காய்கறிகளை சாகுபடி செய்யும் ஆற்றலை இந்தப் பண்ணை கொண்டு உள்ளது.
பண்ணையின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர்.
சிங்கப்பூர் உணவு அமைப்பின் $50 மில்லியன் மதிக்கத்தக்க வேளாண் உற்பத்தித்திறன் நிதியின் மூலம் பலன் அடைந்துள்ள பண்ணைகளில் 'குரோகிரேஸ்' பண்ணையும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகள் காய்கறி சாகுபடியை அதிகரிக்க உதவ இந்த நிதி 2014ல் தொடங்கப்பட்டது. 2030க்குள் உள்ளூர் ஊட்டச்சத்துணவு தேவையில் 30 விழுக்காடு அளவைப் பூர்த்தி செய்யவும் இந்த நிதி உதவுகிறது.
உயர் தொழில்நுட்பச் சாதனங்கள், வேளாண் முறையைக் கடைப்பிடிக்க 132 நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆதரவளித்து உள்ளதாக டாக்டர் கோர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு வேளாண் உற்பத்தித்திறன் நிதிக்குப் பதிலாக $60 மில்லியன் மதிப்புள்ள புதிய வேளாண் உணவுக் குழும உருமாற்ற நிதி தொடங்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது மேலும் அதிக நிதியை வழங்கும். இதன் மூலம் கூடுதல் உணவு வகைகள் உற்பத்தித்திறன் வாய்ந்த, நீடித்த நிலைத்தன்மையுடைய தொழில்நுட்பங்கள், மேம்பட்ட வேளாண் முறை போன்றவற்றைக் கடைப்பிடிக்க இந்த நிதி உதவும்.
இதுவரை இந்த நிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள $3.8 மில்லியன், 13 திட்டங்களுக்கு வழங்கப்படும் என்றார் டாக்டர் கோர்.