தேசிய தின விடுமுறைக் காலத்தை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் தாமதமும் போக்குவரத்து நெரிசலும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வார இறுதியில் மட்டும் நாளுக்கு 290,000க்கும் மேற்பட்டோர் சோதனைச்சாவடிகள்வழி கடந்தனர்.
உட்லண்ட்ஸ் பாலம் வழியாகவும் சோதனைச் சாவடிகளின் வழியாகவும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், பயணிகள் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்க, தங்களது பயணத் திட்டங்களில் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கொவிட்-19 நோய்ப் பரவலுக்கு முந்தைய ஆண்டான 2019ல், தேசிய தின நீண்ட வார இறுதியின்போது போக்குவரத்து நெரிசல் உச்சத்தைத் தொட்டது. நிலச் சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்திய பயணிகள், நான்கு மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) குறிப்பிட்டது.
சிங்கப்பூரிலிருந்து புறப்படுவதற்கு முன், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் 'ஒன் மோட்டோரிங்' இணையத்தளத்தின் வழியாக நிலச் சோதனைச் சாவடிகளின் போக்குவரத்தைக் கண்காணிக்குமாறு வாகனமோட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

