உலகெங்கும் இயங்கிவரும் 19 விமான நிறுவனங்களில், விமானப் பயணம் ரத்து செய்யப்படுவதைத் தவிர்ப்பதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) முதலிடம் பெற்றுள்ளது. இதுவரை அதன் திட்டமிட்ட சேவைகளில் 0.1% மட்டுமே எஸ்ஐஏ ரத்து செய்ததாக 'சிரியம்' பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்ட தரவுகளில் தெரியவந்துள்ளது.
பட்டியலின் இறுதி இடத்தை 'வெர்ஜின் ஆஸ்திரேலியா' பிடித்திருந்தது. மூன்று மாதங்களில் ஆக அதிக எண்ணிக்கையில் சுமார் 2,200 விமானப் பயணங்களை அது ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
பத்தாயிரக்கணக்கில் விமானிகள், விமானச் சிப்பந்திகள், பயணப்பெட்டி பணியாளர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் போன்றோரைக் கொள்ளைநோய் காலகட்டத்தில் பணிநீக்கம் செய்ததை அடுத்து தற்போது அதிகரிக்கும் விமானப் பயணங்களைச் சமாளிக்க விமானப் போக்குவரத்துத் துறை திணறுகிறது.
பட்டியலில் குவாண்டஸ் ஏர்வேஸ், ஏர் நியூசிலாந்து போன்ற நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

