அமெரிக்க ஆகாயப் படை தலைமைத் தளபதி ஜெனரல் சார்ல்ஸ் பிரௌன் ஜூனியருக்கு பிரசித்திபெற்ற ராணுவ விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆகாயப் படைக்கும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படைக்கும் இடையே உன்னதமான, நீண்டகால தற்காப்பு உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அதிபர் ஹலிமா யாக்கோப், ஜெனரல் பிரௌனுக்கு மெச்சத்தகுந்த சேவைப் பதக்கத்தை (ராணுவம்) வழங்கிச் சிறப்பித்தார்.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தற்காப்பு அமைச்சில் நேற்று இவரிடம் இந்த விருதை வழங்கினார்.
ஜெனரல் பிரௌனின் சிறந்த தலைமைத்துவத்தின்கீழ் இரு நாட்டு ஆகாயப் படைகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளதாக தற்காப்பு அமைச்சு கூறியது.
நான்கு 'பி' ரக எஃப்-35 போர் விமானங்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாக 2019ல் தற்காப்பு அமைச்சு அறிவித்திருந்தது. பயிற்சி, மதிப்பீட்டிற்காக அவை அமெரிக்காவில் பயன்படுத்தப்படும்.
இரு ஆகாயப் படைகளும் பயிற்சியின்போது இணைந்து செயல்படுவதற்கு ஜெனரல் பிரௌன் ஆதரவு தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஆகஸ்ட் 7 முதல் நாளை வரை ஜெனரல் பிரௌன் சிங்கப்பூரில் உள்ளார்.
புக்கிட் பாஞ்சாங் முகாமில் மரியாதை காவல் அணியைப் பார்வையிட்ட பிறகு டாக்டர் இங், தற்காப்புப் படைத் தலைவர் மெல்வின் ஓங், ஆகாயப் படைத் தலைவர் கெல்வின் கோங் ஆகியோரை ஜெனரல் பிரௌன் தற்காப்பு அமைச்சில் சந்தித்தார்.
செம்பாவாங் ஆகாயப் படைத் தளத்திற்கு நேற்று செல்லவிருந்த இவர், எச்225எம் ரக ஹெலிகாப்டரில் ஏறிப் பயணம் செய்ய இருந்தார்.

