வேலை செல்லும் சிங்கப்பூரர்கள் கருத்துகளை அறியும் திட்டம்
வேலை செல்லும் சுமார் 20,000 சிங்கப்பூரர்களின் கவலைகள், முன்னுரிமைகள், லட்சியங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஓராண்டுகால திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. ஊழியர்களிடமிருந்து திரட்டப்படும் கருத்துகளை தொழிற்சங்கங்கள், சங்கங்கள், சமூக அமைப்புகள் போன்றவை எவ்வாறு கையாளலாம் என்பதையும் இத்திட்டம் ஆராயும் என்று நேற்று முன்தினம் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறினார்.
என்டியுசியின் இந்தக் கலந்துரையாடல்களின் முதல் கட்டம், இவ்வாண்டு இறுதிவரை நீடிக்கும். பள்ளிகளில் அல்லது தொழிற்சங்கத் தலைவர்களுடன் கருத்துக்கணிப்புகள், குவிநோக்கக் குழுக்கள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் மூலம் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் தங்களின் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும். ஊழியர்களுக்கு மேலும் எவ்வாறு ஆதரவு வழங்கலாம் என்பது குறித்து இரண்டாம் கட்டத்தின்போது முத்தரப்புப் பங்காளிகள், உயர்கல்வி நிலையங்கள், குடிமைச் சமூக அமைப்புகள் போன்றோருடன் தொடர் பயிலரங்குகள் நடத்தப்படும். மூன்றாம் கட்டத்தின்போது என்டியுசி அதன் பரிந்துரைகளை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தெரியப்படுத்தும்.
வேலை-கல்வி திட்டத்தின்கீழ் 2023ல் நான்கு புதிய பாடங்கள்
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் (எஸ்எஸ்ஜி) அமைப்பின் வேலை-கல்வி திட்டத்தின்கீழ் அடுத்த ஆண்டு நான்கு புதிய பாடங்கள் சேர்க்கப்படவுள்ளன. வாடிக்கையாளர் அனுபவ நிர்வாகம், வேளாண் மற்றும் மீன்வளர்ப்பு தொழில்நுட்பம், வசதிகள் நிர்வாகம் ஆகியவற்றை தொழில்நுட்பக் கல்விக் கழகமும் விண்வெளிப் பொறியியல் படிப்பை சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியும் வழங்கவுள்ளன.
தொழில்துறை தொடர்பான திறன்களைப் பட்டதாரிகள் பெற்றுத் தங்களை மேம்படுத்திக்கொள்ள இந்தத் திட்டம் வாய்ப்பளிக்கும் என்று கூறப்படுகிறது. பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களும் வழங்கும் 190க்கும் மேற்பட்ட பாடங்களைப் பயின்று 9,000க்கும் மேற்பட்டோர் இந்த எஸ்எஸ்ஜி
வேலை-கல்வி திட்டத்தின்கீழ் பலனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2019ல் வேலை-கல்வி திட்டம் எனப் பெயர் மாற்றம் கண்டது.

