அதிக அளவு சர்க்கரை, கெட்ட கொழுப்பு ஆகியவற்றுடன் கூடிய பானத்தை உடனுக்குடன் தயாரித்து விற்கும் கடைகள் புதிய நிபந்தனைகளை அடுத்த ஆண்டு இறுதி வாக்கில் நிறைவேற்றவேண்டிய தேவை இருக்கும்.
தாங்கள் தயாரித்து விற்கும் பானத்தில் சர்க்கரை அளவு என்ன, உறைந்த கொழுப்பு, (கரையாத கெட்ட கொழுப்பு) எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அவை சத்துத் தர அளவீட்டுக் குறிப்பில் வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
உடனுக்குடன் தயாரித்து விற்கப்படும் காப்பி, பழச்சாறு, தேநீர் போன்ற பானங்கள் இவற்றில் அடங்கும். சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் இந்த விவரங்களை அறிவித்தார்.
டப்பிகளில் அடைத்து விற்கப்படும் அதிக சர்க்கரை, உறைந்த கொழுப்பு உள்ள பானங்களில் சத்துத் தர அளவீட்டு குறியீடுகள் இருக்க வேண்டும் என்ற விதி இந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி நடப்புக்கு வரும்.
இதையடுத்து அடுத்த ஆண்டு முடிவில் புது விதி நடப்புக்கு வரும்.
அதிக சர்க்கரை, கெட்ட கொழுப்பு இருக்கும் பானத்தை உடனுக்குடன் தயாரித்து விற்கும் கடைகள், அத்தகைய பானத்தைப் பிரபலப்படுத்த விளம்பரம் செய்ய முடியாது என்றார் அமைச்சர்.
அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் வெளியிடுவதன் தொடர்பில் செயல்பட்டு வருகிறது.
நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றியைச் சாதிக்கும் வகையில், மக்கள் உணவில் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் புதிய விதிகள் நடப்புக்கு வருகின்றன.
அரசாங்கம், 'நலமிக்க எஸ்ஜி' என்ற சுகாதாரப் பராமரிப்பு உருமாற்ற உத்தியைக் கைக்கொண்டு வருகிறது. நோய்களை வருமுன் காத்துக்கொள்ளும் அணுகுமுறை அந்த உத்தியின் அங்கமாக இருக்கிறது.
சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் ஆறு பேருக்குச் சிறுநீரகம் கெட்டுப் போய்விடுகிறது. இந்த எண்ணிக்கை 2011ல் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய நான்காக இருந்தது.
சிறுநீரகம் செயலிழந்துப் போவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று வயது. மற்றொன்று நீரிழிவு நோய்.
சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது. பல ஆண்டு காலமாகவே நீரிழிவு குறைந்தபாடில்லை. நீரிழிவு நோய்க்கு உடல் பருமன் முக்கியமான காரணம். இந்த உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வருகிறது என்று திரு ஓங் சுட்டினார்.
சிங்கப்பூரில் முதல் தடவையாக அனைத்துலக ரத்த சுத்திகரிப்பு பேரவை 2022 கூட்டம் நடக்கிறது. அதை தொடங்கி வைத்து அமைச்சர் உரையாற்றினார்.
புதிய சிறுநீரக நோயாளிகளில் 30 விழுக்காட்டினர் தங்கள் வீடுகளிலேயே சொந்தமாக ரத்தத்தைச் சுத்திகரித்துக்கொள்ளும் வசதியை 2025ஆம் ஆண்டு வாக்கில் ஏற்படுத்த வேண்டும் என்பது அமைச்சின் இலக்காக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

