மின்னிலக்கமயத்துக்கு மாறுவதைப் பொறுத்தவரை சிங்கப்பூர் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. நிறுவனங்கள், மக்கள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கி மின்னிலக்கமயத்தை நாடு வேகப்படுத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக 2019ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கம் மேலும் வேகம் எடுத்துள்ளது. மின்னிலக்கமயத்தைத் தழுவிக்கொள்வதில் அரசு முன்னின்று வழிகாட்டியாகச் செயல்படுகிறது. அதன் சேவைகள் அனைத்தும் கூடுமானவரை வேகமாக மின்னிலக்கமயமாகி, உருமாறி வருகின்றன.
காலத்திற்கு ஏற்ற, குறிப்பாக சிங்கப்பூருக்குப் பொருத்தமான இந்த மாற்றத்தின் பலன் ஏராளம் என்பது கண்கூடாகி வருகிறது. பல்வேறு பணிகளை யும் வசதியாக, எளிதாக, விரைவாக, குறையின்றி, இருந்த இடத்தில் இருந்தபடியே செய்து முடிக்க மின்னிலக்கமயம் பெரும் உதவியாக இருக்கிறது.
அரசாங்கம் தனது மின்னிலக்கமய முயற்சியை ஒட்டி கடந்த ஜூலை மாதம் 6ஆம் தேதி புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் என்ற அந்தச் சட்டம், 1937ஆம் ஆண்டில் நடப்புக்கு வந்த ஒரு சட்டத்திற்குப் பதிலாக இடம்பெறுகிறது.
பிறப்பு, இறப்பு, மரணம் அடைந்த நிலையில் குழந்தை பிறப்பது அனைத்தையும் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டியது புதிய சட்டப் படி கட்டாயமானது. புதிய சட்டத்தின்படி, பிறப்பு, இறப்பை பதியும் நடைமுறையும் அவற்றை அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவதற்கான நடைமுறையும் செம்மையாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.
இதனையொட்டி, மின்னிலக்கப் பிறப்புச் சான்றி தழ்கள் அறிமுகமாயின. வழக்கமாக கையில் கொடுக்கப்படும் காகித அச்சு சான்றிதழுக்குப் பதிலாக மே 29ஆம் தேதி முதல் மின்னிலக்கப் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
தங்கள் குழந்தை பிறந்தது பற்றி பெற்றோர் இணையம் வழியாக தெரியப்படுத்தும் ஏற்பாடும் நடப்புக்கு வந்துள்ளது. அப்போது பிள்ளையின் பெற்றோரின் தாய்மொழி, போன்ற பல்வேறு தகவல் களும் பெறப்பட்டு அவை எல்லாம் அவர்களின் சிங்பாஸ் பக்கத்தில் பதியப்படும்.
சிங்பாஸ் கணக்குடன் கூடிய சிங்கப்பூரர்கள் சிங்பாஸில் அத்தகைய விவரங்களைக் காணலாம்.
என்றாலும் மின்னிலக்கப் பதிவு முறையை எளிமையாக்கும் வகையில் மின்னிலக்க பிறப்புச் சான்றிதழில் பல விவரங்கள் இடம்பெறவில்லை. கொள்கைகள், இதர நிர்வாகத் தேவைகளுக்கு அவசியமில்லாத விவரங்கள் மின்னிலக்கச் சான்றிதழில் இல்லை. அப்படி விடுபட்ட விவரங்களில் பெற்றோரின் தாய்மொழியும் ஒன்று.
பெற்றோரின் தாய்மொழி ஒருபுறம் இருக்க, வழக்கமான பிறப்புச் சான்றிதழில் இடம்பெற்று இருக்கும் இதர பல விவரங்களும் மின்னிலக்க சான்றிதழில் இல்லை.
பெற்றோரின் பிறந்த நாடு, தாயாரின் முகவரி விவரங்கள், பிள்ளையின் பிறந்த இடப் பதிவு உள்ளிட்ட பலவும் புதிய மின்னிலக்கச் சான்றிதழில் இல்லை. புதிய மின்னிலக்கச் சான்றிதழில் தாய்மொழி பற்றிய விவரம் இல்லாமல் இருப்பதைக் கண்டு பல பெற்றோரும் சமூகத் தலைவர்களும் கவலை தெரிவித்தனர்.
இப்போதைய பிள்ளைகள், தாய்மொழியைச் சரியாகப் பேசக்கூட தெரியாமல் சங்கடப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், பிற்பாடு அவர்கள் தங்கள் தாய்மொழி என்ன என்பதைக்கூட தெரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடலாம் என்று சிலர் கவலை தெரிவித்தனர்.
தங்களுடைய மூதாதையர்கள் பற்றியும் தாய்மொழி பற்றியும் இளையருக்கு அவ்வளவாகத் தெரியாத சூழல் இருக்கிறது. இந்த நிலையில், பிறப்புச் சான்றிதழில் அந்த விவரங்களைப் பதியவைத்து அரசாங்கம் உதவ வேண்டும் என்று சிலர் குரல்கொடுத்தனர்.
அத்தகைய சான்றிதழில் தாய்மொழி உள்ளிட்ட விவரங்கள் இல்லாததால் பின்னர் வேர் அறுந்து போய்விடக்கூடிய நிலை இளையர்களுக்கு ஏற்படலாம் என்றுகூட சிலர் அச்சம் தெரிவித்தனர்.
தாய்மொழி என்ன என்பது புரியாமல் இருக்கும் நிலையில், தங்கள் முன்னோடிகள் பற்றி தெரியாம லேயே போய்விடக்கூடும்; எதிர்கால தலைமுறையின் நல்வாழ்வை உத்தேசித்து தங்களுடைய பூர்வீக இடத்தை எல்லாம் விட்டுவிட்டு இங்கு வந்து குடியேற அவர்கள் செய்த தியாகங்களை எல்லாம் இளையர்கள் மறந்துவிடக்கூடிய சூழ்நிலைக்கூட வரலாம் என்றும் சிலர் கவலை தெரிவித்து இருந்தனர்.
இவற்றை எல்லாம் செவிமடுத்த அரசாங்கம், மின்னிலக்கச் சான்றிதழில் தாய்மொழி விவரத்தைச் சேர்க்கப்போவதாக அறிவித்து இருக்கிறது.
புதிதாக பிறக்கும் குழந்தையின் பெற்றோரின் தாய்மொழிகள் மின்னிலக்க பிறப்புச் சான்றிதழில் சேர்க்கப்படும் என்று கடந்த வெள்ளிக்கிழமை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் அறிவித்தது.
வரும் செப்டம்பர் மாதம் முதல் கொடுக்கப்படும் மின்னிலக்கப் பிறப்புச் சான்றிதழில் பிள்ளையின் தாய், தந்தை இருவரின் தாய்மொழி விவரம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மே 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மின்னிலக்கப் பிறப்புச் சான்றிதழைப் பெற்றிருப்போர், செப்டம்பர் 1ல் இருந்து அவற்றை புதிதாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதற்குக் கூடுதல் செலவும் இருக்காது.
இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று இருக்கிறார்கள். இதன்மூலம் இளம் தலைமுறை தங்களைப் பற்றி நல்லமுறையில் தெரிந்துகொண்டு பாரம்பரியத்தை, மொழியைக் காக்க பாடுபடுவார்கள் என்று பலர் நம்பிக்கை தெரிவித்தனர்.
பிறப்புச் சான்றிதழில் தாய்மொழி உள்ளிட்ட விவரம் இருக்கும் என்பதால் தாங்கள் யார் என்பதற்கான அடையாளமாக அது திகழும் என்று சொல்லி, தங்களுடைய கோரிக்கைக்குச் செவிசாய்த்து செயல்பட்டு இருக்கும் அரசாங்கத்தைப் பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.
இனிமேல் பிறப்புச் சான்றிதழ்கள் மின்னிலக்க வடிவில்தான் இருக்கும் என்ற நிலையில், உலகம் எப்படி உருமாறினாலும் மின்னிலக்கமய யுகம் தொடங்கினாலும் தாய்மொழி என்பது மாறாதது. அது உடன்வர வேண்டிய ஒன்று என்பதை அரசின் இந்த முயற்சி உறுதிப்படுத்தும்.

