தேசிய வளர்ச்சி அமைச்சில் நேற்று நடந்த இரைச்சல் தொடர்பான எட்டாவது குழு கலந்துரையாடலில் 53 பேர் கலந்துகொண்டனர். 20 வயது முதல் 70க்கும் அதிக வயதுள்ள அவர்களில் 10 பேரில் எட்டுப் பேர் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள்.
அவர்கள் தெரிவித்த கருத்துகளும் யோசனைகளும் புதிய ஒரு தேசிய வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க பயன்படுத்தப்படும்.
அக்கம்பக்கத்தில் எந்த அளவு வரைப்பட்ட இரைச்சலைச் சகித்துக்கொள்ளலாம்; சகித்துக் கொள்ள இயலாத இரைச்சல்கள் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை தெளிவுபடுத்தும் அந்த வழிகாட்டி நெறிமுறைகள் இந்த ஆண்டு இறுதியில் தயாராகிவிடும்.
அருகருகே வசிப்பவர்கள் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அதிக இரைச்சலால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் காப்பிக்கடைகள், கூடைப்பந்து விளையாட்டு இடங்கள் போன்றவற்றில் இருந்து ஏற்படக்கூடிய இரைச்சல் பிரச்சினையையும் கையாளுவதற்காக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சமூக ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
சிங்கப்பூர் கருணை இயக்கத்தின் தலைமைச் செயலாளர் டாக்டர் வில்லியம் வான் அந்தக் குழுவிற்குத் தலைமை ஏற்கிறார்.
சமூகம், கல்வித் துறை ஆகியவற்றை பிரதிநிதித்தும் பொதுமக்களைப் பிரதிநிதித்தும் அந்தக் குழுவில் ஒன்பது பேர் உள்ளனர்.
அந்தக் குழுவுக்கு கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சும் மாநகர் சேவை அலுவலகம் என்ற அமைப்பும் உதவுகின்றன.
இப்போதைய இரைச்சல் இல்லா நேரமான இரவு 10.30 மணி முதல் காலை 7 மணி வரையிலான நேரத்தை மாற்றி அமைப்பதன் தொடர்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் பரிந்துரைகளை அந்தக் குழு ஆராய்ந்து வருகிறது.
வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றார். அக்கம்பக்கத்தினர் ஏற்படுத்தும் இரைச்சல் தொடர்பான கருத்துகள், புகார்கள் கடந்த இரண்டாண்டுகளில் அதிகரித்து இருப்பதாக அவர் கூறினார்.
கொவிட்-19 தொற்று காரணமாக பலரும் வீடுகளில் இருந்து பணியாற்றுவதால் அந்த அதிகரிப்பு இடம்பெற்று உள்ளது என்றார் அவர். சிங்கப்பூர் போன்ற மக்கள் நெருக்கமாக வாழும் சூழலில், அக்கம்பக்கத்தில் ஏதோ ஓர் இரைச்சலை அனுபவிப்பது என்பது வழக்கமான ஒன்றாகத்தான் இருக்கும் என்று அவர் கூறினார்.
ஆனால் அதிக உறுப்பினர்களைக்கொண்ட குடும்பங்கள், பின்னிரவு நேரத்தில் மஜோங் விளையாட்டில் ஈடுபடுவது போன்ற செயல்களை அமைதி விரும்பிகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார் அவர்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 28 முதல் நடந்து வருகிறது. அவற்றில் 280 பேர் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு உள்ளனர்.
இணையம் வழி நடத்தப்பட்ட ஆய்வு மூலம் 1,300க்கும் மேற்பட்ட மக்கள் கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
இரைச்சல் இல்லாத நேரத்தை உறுதிப்படுத்துவதே கலந்துரை யாடல்களின் முக்கிய கருப்பொருளாக இருந்துள்ளது என்றார் அவர்.
அதாவது, அதிக இரைச்சலை ஏற்படுத்தக்கூடிய சமூகக் கூட்டங்கள், கொண்டாட்டங்கள், விளையாட்டுகள் ஆகியவை இரைச்சல் இல்லா நேரம் என்று வரையறுக்கப்படும் நேரத்தில் இடம்பெற முடியாது என்பதே இதற்கான பொருள்.
தெம்பனிஸ் நார்த்தில் வீவக புளோக்கில் வசிக்கும் ஸ்டீவன் இயோ, 63, என்ற அடித்தள அமைப்புத் தலைவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் தனக்கு நேர்ந்த அனுபவத்தை நேற்றைய கலந்துரை யாடலில் பகிர்ந்துகொண்டார்.
தன் வீட்டுக்கு மேலே உள்ள வீட்டில் வசித்தவர், இரவு நேரத்தில் இரைச்சலை கிளப்பியதால் தான் சங்கடப்பட்டதாகவும் ஆனால் மேல் வீட்டில் வசித்தவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாகவே வலி தாங்க முடியாமல் அவர் அவ்வாறு இரைச்சலைக் கிளப்பினார் என்பது தனக்குத் தெரியவந்ததாகவும் கூறினார்.