தேர்தல் என்பது பொதுவான ஒரு போட்டி. வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி வேட்பாளர்களை வெற்றியாளர்களாகத் தேர்ந்துஎடுக்கும் அளவிற்கு அந்தப் போட்டி நல்ல ஆரோக்கியமானதாக இருக்குமெனில் அது ஆக்ககர மான ஒன்று என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அடுத்த தேர்தலில் செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிடத் தான் விரும்புவதாக அறிவித்து இருக்கிறது.
அதற்கு அளித்த பதிலில் திரு ஓங் இவ்வாறு தெரிவித்தார்.
செம்பவாங் குழுத்தொகுதியைச் சேர்ந்த மக்கள் செயல் கட்சிக் குழு வில் அமைச்சர் திரு ஓங் மிக முக்கியமானவர்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி 2006ஆம் ஆண்டிலும் 2011ஆம் ஆண்டிலும் நடந்த தேர்தல்களில் செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிட்டது.
அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட தான் விரும்புவதாக தேசிய தினத்தன்று ஜனநாயக் கட்சி கூறியது.
2020 பொதுத் தேர்தலில் தான் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் ஐந்து மணி நேர தொகுதி சுற்றுலாவை அந்தக் கட்சி தேசிய தினத்தன்று மேற்கொண்டது.
கடந்த 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்டதைப் போலவே புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங், ஹாலண்ட்-புக்கிட் தீமா குழுத்தொகுதி, மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி, யூஹுவா ஆகிய ஐந்து தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அந்தக் கட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி அறிவித்தது.
இதனிடையே, மசெக மத்திய செயற்குழுவின் உறுப்பினரான திரு ஓங், நேற்று சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதையொட்டி அவர் ஊடகத்திடம் பேசினார்.
ஜனநாயகக் கட்சியின் இந்த அறிவிப்பு தனக்கு வியப்பளிக்கவில்லை என்றார் அமைச்சர்.
அந்தக் கட்சி செம்பவாங்கில் ஏற்கெனவே போட்டியிட்டு இருக்கிறது என்பதை அவர் சுட்டினார்.
இருந்தாலும் 10 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கட்சி அங்கு போட்டியிட்டது. அதற்கு பிறகு அந்தக் கட்சி அந்தத் தொகுதியில் தீவிர மாக இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
"ஆரோக்கியமான போட்டியை விரும்புகிறோம். மக்களின் ஆதரவை வெல்ல நாங்கள் முடிந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுவோம்," என்றார் திரு ஓங்.
அடுத்த பொதுத் தேர்தல் 2025 நவம்பர் மாதத்திற்குள் நடக்க வேண்டும்.