சிங்கப்பூரில் செயல்படும் மருந்துக் கடைகளில் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் பெனடால் காஃப்&கோல்டு, டிகோல்ஜன் போன்ற மருந்துகள் போதிய அளவுக்கு இல்லை என்று தெரிகிறது.
உருமாறிய ஓமிக்ரான் கிருமி இப்போது வேகமாகப் பரவி பலரையும் பாதிக்கிறது. அப்படி பாதிக்கப்படுவோருக்கு காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படுகின்றன.
அவர்கள் அத்தகைய மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிகிறது.
வாட்ஸ்சன்ஸ், கார்டியன் உள்ளிட்ட பல மருந்துக் கடைகளிலும் பெனடால் காஃப்&கோல்டு, டிகோல்ஜன் மாத்திரைகள் வேகமாக விற்றுத் தீர்கின்றன.
லஸாடா, ஷோபீ போன்ற இணைய வர்த்தகத் தளங்களில் சில விற்பனையாளர்களிடம் இந்த இருவகை மாத்திரைகளும் இருக்கின்றன. என்றாலும் அவை ஓரளவுக்குத்தான் உள்ளன என்பது தெரியவந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கார்டியன் நிறுவனத்தின் இணையத்தளத்தைப் பார்க்கையில், அந்த இரு மாத்திரைகளும் இருப்பு இல்லை என்று தெரிகிறது.
முன்பைவிட அதிகமானவர்கள் நேரடியாக இத்தகைய மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள் என்று அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
பெனடால், டிகோல்ஜன் இரண்டு மாத்திரைகளும் ஆகஸ்ட் மாத முடிவில் போதிய அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பெனடால் மாத்திரைகளைச் சாதனை அளவில் உற்பத்தி செய்வதாக அந்த மாத்திரை தயாரிக்கும் 'ஹாலியோன்' என்ற நிறுவனம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட அந்த நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சில வகை பெனடால் மாத்திரைகள் சில கடைகளில் கிடைக்கவில்லை.
இதனிடையே, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இருமல், காய்ச்சல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய மருந்துக்கு ஒட்டுமொத்த தேவை அதிகரித்து இருப்பதாக ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் உருமாறிய ஓமிக்ரான் கிருமி பரவத் தொடங்கியது.
மருந்துக்கடைகளில் காய்ச்சல், இருமல் மாத்திரைகளை அதிகம் பேர் வாங்குகிறார்கள்