சிங்கப்பூரில் குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டிச்சென்றதால் ஏற்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்து வந்துள்ளது.
அத்தகைய விபத்துகள் ஆண்டுக்கு 150 முதல் 176 வரை நிகழ்ந்துள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சென்ற ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை கொஞ்சம் கூடி 152 ஆகியது.
இதனிடையே, போதைப்பொருளுக்கு, மதுபானத்திற்கு, சூதாட்டத்திற்கு அடிமையாகி பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சிகிச்சை அளித்து உதவும் 'விகேர் சமூக சேவை' என்ற அமைப்பு, வாகனத்தை நிதானமாக ஓட்ட முடியாமல் தள்ளாடும்போதுதான் தங்களுக்குப் போதை ஏறிவிட்டது என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள் என்றது.
ஆனால், அத்தகைய அறிகுறி தெரியாமல் இருந்தாலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது பிரச்சினைதான் என்று இந்த அமைப்பு விளக்கியது. கொஞ்ச மாக குடித்தாலும் ஆபத்து உண்டு என்று அது தெரிவித்தது.
இவ்வேளையில், ஒருவர் எவ்வளவு குடிக்க முடியும், எவ்வளவு நேரத்தில் ஒருவருக்குப் போதை ஏறும் என்பது பல்வேறு அம்சங்களைப் பொறுத்தது என்று மவுண்ட் எலிசபெத் நொவினா மருத்துவமனையின் வயிற்று நோய் சிகிச்சை வல்லுநர் டாக்டர் டெஸ்மண்ட் வாய் கூறினார்.
பொதுவாக பெண்களைவிட ஆண்கள் அதிகம் மதுபானம் குடிக்க முடியும். ஆண்களைவிட பெண்கள் உடலில் தண்ணீர் விகிதாச்சாரம் குறைவாக இருக்கும் என்பதே இதற்கான காரணம்.
மது (ஆல்கஹால்) இரத்த ஓட்டத்தில் தண்ணீருடன் கலந்துதான் உடல் எங்கும் செல்லும். ஆகையால் உடலில் அதிக தண்ணீர் இருந்தால் மது அதிகமாக நீர்த்துப்போகும்.
உடலில் மது மூலக்கூறைப் பிரிக்கக்கூடிய ஒருவகை நிறமற்ற திரவம் (என்சைம்) பெண்கள் உடலில் குறைவாகவே சுரக்கும்.
ஒருவருக்கு வயது ஆகஆக மது மூலக்கூறைச் சிதைத்து பிரிக்கும் ஆற்றல் அவரின் உடலில் குறைந்துகொண்டே வரும். மதுபானத்தை அவசர அவசரமாக 'மடக்மடக்' என்று குடித்தால் உடலில் மதுவின் அடர்த்தி அதிகமாகும்.
சாப்பிட்ட பிறகு குடித்தால், வெறும் வயிற்றில் குடிப்பதைவிட மெதுவாகவே மது உடலில் சேரும். கல்லீரல் பிரச்சினை இருப்போரின் உடலில் மதுவின் மூலக் கூறு சிதைந்து இரத்தத்தில் கலப் பது மிகவும் மெதுவாகவே நடக்கும் என்று அவர் விளக்கினார்.
இதனிடையே, ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் 2020ஆம் ஆண்டில் குடித்துவிட்டு வாடகை கார் ஒன்றை ஓட்டிச் சென்றார்.
கேலாங்கில் சாலையோர புதரில் அவர் வாகனத்தை மோதிவிட்டார். அவர் கையில் சிராய்ப்புக் காயம் ஏற்பட்டது.
அதைப் பார்த்த வேறு ஒருவர் அது பற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
அதையடுத்து அந்த நிறுவன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர் எச்சரிக்கப்பட்டார்.
வாடகை காருக்கு $40,000 அளவுக்குச் சேதம் ஏற்பட்டுவிட்டது. இந்தச் சம்பவத்தை அடுத்து அந்த நிறுவன உரிமையாளர், 'இனி ஒரு போதும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டப் போவதில்லை' என்று முடிவு செய்துவிட்டார்.
"உயிர் தப்பியதே பெரும் புண்ணியம். இனிமேல் விஷப்பரிட்சையில் இறங்கமாட்டேன்," என்று அவர் உறுதிபட தெரிவித்துவிட்டார்.